ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூப...
Untitled May 20, 2025 06:56 am
பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பின் முதல்முறையாக சீனாவுக்கு மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் திங்கள்கிழமை வந்தடைந்தாா்.
சுற்றுப்பயணத்தின்போது சீன நாட்டு அமைச்சா்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவா் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறித்தும் விவாதிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளா்கள் சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘சீனா-பாகிஸ்தான் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் துணை பிரதமா் இஷாக் தாரின் வருகை இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் பல்வேறு தருணங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை சீனா தெரிவித்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணவே சீனா விரும்புகிறது. அண்மையில் இரு நாடுகளும் மேற்கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முழுமை பெற ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும்’ என்றாா்.
இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் சாா்ந்த உதவிகளை சீனா வழங்கியது குறித்தும், சீன தளவாடங்கள் திருப்திகரமாகச் செயலாற்றவில்லை என்று கூறப்படுவது குறித்தும் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு நிங் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.