VCK: "அவன் சாவு என்னைக் குற்ற உணர்ச்சிக்குள் வீழ்த்தியது" - தம்பி குறித்து திருமாவளவன் உருக்கம்
"நான் உயிரோடு இருக்கிறேன் என்பதாலேயே தம்பி ராதாவின் மரணத்தை யாரும் பெரிதாகக் கருதவில்லை என்கிற வேதனை மேலும் கடுமையாக என்னை வாட்டியது" என்று தன் தம்பியின் நினைவு நாளில் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
32 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் மரணமடைந்த திருமாவளவனின் சகோதரர் தொல்.ராதாகிருஷ்ணனின் நினைவு நாளான இன்று திருமாவளவன் பதிவிட்டுள்ள உருக்கமான அஞ்சலியில், "தம்பி ராதாகிருஷ்ணன் மறைந்து 32 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மதுரை அருகே வாடிப்பட்டியில் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தான். அவன் சென்ற இருசக்கர வண்டியில் அரசுப் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
அன்று கோ.புதூரில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் மாவீரன் மலைச்சாமி நினைவு நாள் கொண்டாடுவது பற்றி முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்து கொண்டிருந்தேன். இரவு 8 மணி இருக்கும், அப்போதுதான் அத்தகவலைச் சொன்னார்கள். தம்பி ராதாகிருஷ்ணன் விபத்தில் இறந்துவிட்டான் என்றும், அவனுடன் சென்ற அறிவழகன் என்பவர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினர். மூளை நரம்புகள் வெடித்ததைப் போன்று நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்கிற கவலையும் அச்சமும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. மனமுடைந்து நொறுங்கிப் போனேன். அவனைப் பிணமாகப் பார்க்க மனம் ஒப்ப இயலாத நிலையில் விபத்து நடந்த இடத்திற்கே நான் போகவில்லை.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிணக்கூறாய்வு பொழுது விடிந்த பின்னர்தான் நடக்குமென்றும் அதன்பிறகு அங்கிருந்து உடலைப் பெற்றுக்கொண்டு திருச்சி வழியாக அங்கனூர் வந்து சேர்கிறோம் என்றும் இயக்கத்தோழர்கள் மற்றும் தலித் அல்லாத சமூகங்களைச் சார்ந்த சில நண்பர்களும் கூறினர். ஆகவே நான் அடுத்த நாள் பகலில் மதுரையிலிருந்து அங்கனூருக்குப் போனேன். தம்பியின் உடலும் வந்து சேர்ந்தது.

இதற்கிடையில் அங்கே ஒரு வதந்தி பரவியிருந்தது. தம்பி ராதா இறந்துபோனதாகச் சொல்வது பொய்யென்றும் திருமாவளவனைத்தான் யாரோ கொலை செய்துவிட்டு உண்மையை மறைக்கிறார்கள் என்றும் ஊர்முழுதும் வதந்தி பரவியிருந்த விவரம் பின்னர்தான் தெரிய வந்தது.
நான் அங்கனூரில் இறங்கியதும் என் அப்பாவும் அம்மாவும் கதறி அழுது மண்ணில் விழுந்து புரண்டனர். பதறி, கதறி அழுத எனது தந்தை திடீரென மயங்கி விழுந்தார். அப்போது சுற்றி நின்றவர்கள் தான் சொன்னார்கள்.
"உன்னைக் கொலை செய்து விட்டார்கள் என்றுதான் தகவல். உன்னை உயிரோடு பார்த்த பிறகு தான் இறந்தது தம்பி ராதாதான் என்று நம்பினோம். உனக்கு ஒன்றுமில்லையே அது போதும்" என்றனர். அது இன்னும் ஆழமாக எனக்குள் வலியை ஏற்படுத்தியது. நான் உயிரோடு இருக்கிறேன் என்பதாலேயே தம்பி இராதாவின் மரணத்தை யாரும் பெரிதாகக் கருதவில்லை என்கிற வேதனை மேலும் கடுமையாக என்னை வாட்டியது.
அங்கனூரை ஒட்டியுள்ள சின்னாற்றங்கரையில் பொழுது மறைந்து இருள் சூழும் வேளையில் தம்பி ராதாவின் உடலை அடக்கம் செய்தோம்.
கடைசி வரையில் அவன் முகத்தைப் பார்க்கவே என்னால் இயலவில்லை. இன்னும் அந்தக் குற்ற உணர்ச்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. என்னால் அவன் சாவுக்கும்கூட உரிய மதிப்பளிக்கப்படவில்லையே என்று என் நெஞ்சை இன்றும் வருத்திக் கொண்டேயிருக்கிறது
'அவன் எனது தம்பி' என்பதைவிட ,விடுதலைச் சிறுத்தைகளின் தொடக்கக் காலத் தொண்டன் என்பதே சரியாகும். எனக்கு உதவியாக இருந்தான். என்னைச் சந்திக்க வருவோருக்கும் பணிவிடைகள் செய்தான். மதுரை பகுதிகளில் நடைபெற்ற இயக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்றான்.
.jpeg)
அன்றும் கூட அலங்காநல்லூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரே விபத்தில் சிக்கி மரணமடைந்தான். அவன் சாவு என்னைக் குற்ற உணர்ச்சிக்குள் வீழ்த்தியது.
அந்தத் துக்கத்திலிருந்து மீள இயலாத நிலையில் ஓரிரு மாதங்கள் மிகவும் வேதனைப்பட்டேன். என் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நான் துயரத்தில் வீழ்ந்ததால் என் பெற்றோர் எனக்கு ஆறுதல் கூறினார்கள். அதன் பின்னர் மீண்டெழுந்து எனது அரசியல் பணிகளைத் தொடர்ந்தேன். தொடக்கக்காலத்தில் களப்பணிகளில் எனக்கு உற்றதுணையாக இருந்த தம்பி ராதாவுக்கு எனது செம்மாந்த வீரவணக்கம்" என்று பதிவு செய்துள்ளார்.