Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை
நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய், நடிகராக விகடன் வாசகர் மேடையில் வாசகர்களின் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில்களின் மீள்பதிவு.
இன்றைய அரசியலில் யாரைப் புத்திசாலியாகக் கருதுகிறீர்கள்?
தேர்தலில் - எப்படியாவது ஜெயித்து விடவேண்டுமென்று எல்லா கொள்கைகளையும் 99 மறந்துவிட்டு, எப்படியாவது கூட்டு சேர்ந்து, எப்படியோ ஜெயித்துவிடுகிறார்களே... அவர்கள்தான் புத்திசாலிகள்.
உங்களை ஒரே ஒரு நாள் சென்னை மேயராக நியமித்தால், உங்களின் முதல் பணி என்னவாக இருக்கும்?
சென்னையைச் சிங்கப்பூராக மாற்ற முயற்சி செய்வேன்.
உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் எது?
''வள்ளலார் சொன்ன 'விழித்திரு, தனித்திரு, பசித்திரு!''
வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?
'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’னு ஊர் உலகமே சொல்ற புரட்சித் தலைவரைப் பார்த்து!''
உங்களுக்குப் பிடித்த மனிதர் யார்?
''ண்ணா... 'கள்’ சேர்த்துக்கலாமா? மனிதர்'கள்’ணா!காந்தி, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். இவங்களை எனக்கு மட்டுமா.... ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்தானே!''
சாதிகள் ஒழியாதா?
''சாதியை மையமாவெச்சு அரசியல் நடத்தினவங்களுக்கு, இந்தத் தேர்தல்ல மக்கள் மரண அடி கொடுத்து இருக்காங்க. சாதி நம்மை மீண்டும் கற்காலத்துக்கு அழைச்சுட்டுப் போயிடும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுடும். மக்கள் விரும்பறது 'சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன பாரதியாரின் வரிகளைத்தான்!''
முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது எது? டாக்டர் கலைஞரிடம் பிடித்தது எது?
''முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். கலைஞரிடம் பிடித்தது அவருடைய இலக்கியம்!''
(1999 ஆகஸ்ட் 18, 2003 அக்டோபர் 05, 2011 ஜூன் 08, 22 ஆகிய தேதிகளில் வெளியான ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...)