செய்திகள் :

War: இஸ்ரேல், அமெரிக்கா Vs ஈரான்; வெற்றி பெற்றது யார்? - யாருக்கு என்ன லாபம்? - ஓர் அலசல்

post image

'இஸ்ரேல்' கடந்த சில வருடங்களாக செய்திகளில் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. காஸா மீது தொடங்கியப்போர் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான் பக்கம் திரும்பியதால், உலகமே தன்னுடைய வாய்க்கு பேசுபொருளாக இஸ்ரேலையும் ஈரானையும் அவலாக்கி இருக்கிறது

இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் 'ரத்தக்கவுச்சி வீசும்' பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியக் காரணமாக இருப்பது அணு ஆயுதம்.

'ஈரான் கரத்தில் உருவாகும் அணு ஆயுதம் எங்கள் நாட்டுக்குக் கேடு' என உறுதியாக நம்புகிறது இஸ்ரேல். இதை தடுக்க வேண்டும் என உலகின் பெரியண்ணன் மனப்பான்மையுடன் இருக்கும் அமெரிக்காவின் சுண்டுவிரலையும் பற்றிக்கொண்டிருக்கிறது.

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் Vs ஈரான்

உலகம் எப்போதும் போல ஜூன் 13 அன்று அதிகாலை கண்விழித்தபோது, 'இதோ தொடங்கிவிட்டது மூன்றாம் உலகப் போருக்கான முதல் தாக்குதல்' என்றப் பதற்றத்துடன் 'ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்' செய்திகள் வாசிக்கப்பட்டது.

இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி, இராணுவ தளங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதும், அதற்கு பதிலடியாக 100 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதும் உள்ளூர் முதல் ஐ.நா வரை பதற்றம் பற்றிக்கொண்டது.

'அணு ஆயுதத்துக்காக இப்படி தாக்கிக்கொள்கிறார்களா?' என்றக் கேள்வி எழுந்த போது 'பகைமா பகை... இது பழைய பகை' என அருந்ததி மனோரமா போல இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான முன் வரலாற்று சுருக்கங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்தின ஊடங்கங்கள்.

இதற்கு நடுவில், 'ஈரான் மீது கைவைத்தால் அவ்வளவுதான்' என்றக் கொக்கரிப்புடன் ரஷ்யாவும், 'ஆதரவு தெரிவிக்கிறேன்' என வாய்க்குள்ளேயே சொல்லிக்கொண்ட சீனாவும் ஈரான் பக்கம் நின்றன.

இதனால் அமெரிக்கா மீது கோபித்துக்கொண்ட இஸ்ரேல் 'எங்களுக்கு யாரும் வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்' என சூசகமாக அமெரிக்காவை சூடேற்றியது. உடனே அமெரிக்கா 'நாங்க இருக்கோம்' பாணியில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகளை பாய்ச்சியது.

இதனால், 'இஸ்ரேலை மட்டுமல்ல அமெரிக்காவையும் எதிர்ப்போம்' என வெளிரங்கத்தில் ரோஷப்பட்டதுப் போல காட்டிக்கொண்ட ஈரான், 'உங்க இடத்துல குண்டு போடப்போறோம். பாத்து சூதனமா இருங்கா மக்கா' என அமெரிக்காவிடம் சொல்லிவிட்டு, கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் - ஈரான் போர்

ஆனால், உலக நாடுகள், ``என்ன இது? உண்மையிலேயே மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதே'' என பதற்றமடைந்தவர்களுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு கொடுத்தார்.

அதாவது, இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில், `அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சிது, ஆட்டைய களைங்க... நீ கைகொடு, நீயும் கையக்கொடு" என சமாதான முயற்சியில் இறங்கினார். அந்த சமாதானப் புறா பறக்க ஒரிரு மணிநேரங்கள் ஆனாலும், அது பறந்தது.

உலக நாடுகள் 'ஆ...' வென அந்த சமாதானப்புறா பறப்பதை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, போர் நிறுத்த முடிவுக்குப் பிறகும், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தொப்பென விழுந்தது அது. சமானாதப்புறாவை பறக்கவிட்ட ட்ரம்ப் 'என்னடா இப்டி பண்றீங்க' என நொந்துகொண்டு பேசிய பேட்டிகளும் வைரலானது. இப்படி ஆராவரத்தில் தொடங்கி நொந்தலில் முடிந்திருக்கிறது போர்.

இதெல்லாம் சரிதான்... ஆனால், இந்தப் போரால் யாருக்கு என்ன கிடைத்தது? யார் இந்தப் போரில் வென்றது? என்றக் கேள்வி எழுந்தபோது 'இது என்னோடதாக்கும்..." என இந்தப் போர் முடிவின் வெற்றியை அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் என மூன்று நாடுகளும் சொந்தம்கொண்டாடுகிறது. அதனால் இந்தப் போர் யாருக்கு லாபம் என்பது பற்றி நாமே அலசி ஆராய்வோம்.

அமெரிக்கா

எந்தப் போராக இருந்தாலும் அதற்குத் தீர்வு ராஜதந்திர நடவடிக்கை மட்டுமே என பவ்யமாக பேசிவந்த அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் - ஈரான் போரின்போது ஆக்ரோஷமாக, ``மத்திய கிழக்கின் கொடுமைக்காரன் ஈரான்" என்றார். அதைத் தொடர்ந்து, 'சமாதானத்துக்கு வா... இல்லையென்றால் பாதிப்பு உனக்கு ரொம்ப அதிகமா இருக்கும்' என மிரட்டியும் பார்த்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணுசக்தி நிலையங்களில் B-2 குண்டுகளை வீசியது.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

இன்னொருபுறம், இந்தத் தாக்குதல் புவியியல் அரசியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, அதிபர் ட்ரம்ப்புக்கு அவரின் நாட்டிலேயே அரசியல் ரீதியில் பெரும் சிக்கலை கொண்டுவரும் என 'Atlantic Council' எனும் உலகளாவிய கொள்கை மைய மூத்த உறுப்பினரான ஜோனாதன் பானிகாஃப் தெரிவித்திருக்கிறார்.

போர் கூடாது:

அதிபர் ட்ரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போதுகூட அவருக்கு முன்பு இருந்த அதிபர்கள் 'போரால் நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டார்கள்' என்றக் குற்றச்சாட்டை முன்வைத்துதான் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார். சர்வதேச ஆன்லைன் ஆராய்ச்சி தரவும், பகுப்பாய்வு தொழில்நுட்பக் குழுவான யூகோவின் தரவும், "அமெரிக்க மக்கள், தங்கள் நாடு பிற நாடுகளின் போரில் தலையிடக் கூடாது என்பதில் தெளிவாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கின்றனர்" என்கிறது.

அதனால்தான், எந்த நாட்டில் போர் சூழல் ஏற்பட்டாலும் அங்கு (நோபல் பரிசுக்காக) ஆஜராகி சமாதானம் செய்துவைப்பதை வழக்கமாக தொடர்கிறார் அதிபர் ட்ரம்ப். இந்தியா விவகாரத்தில் மூக்கை நுழைத்ததும் இதன் அடிப்படையில்தான்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் கொள்கைகளை எதிர்த்து வெளியுறவுத்துறையில் இருந்து ராஜினாமா செய்து, தற்போது குயின்சி இன்ஸ்டிடியூட் ஃபார் ரெஸ்பான்சிபிள் ஸ்டேட்கிராஃப்டில் இருக்கும் அன்னெல் ஷெலின் ட்ரம்ப் நடவடிக்கை குறித்து எழுதிய நீண்ட கட்டுரையில், ``போர்நிறுத்தத்தை அமல்படுத்துவது ட்ரம்பிற்கு மிகவும் முக்கியமானது. நெதன்யாகு அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவை அனுபவித்து வருகிறார்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

இஸ்ரேலை கட்டுப்படுத்த விரும்பினால், அதைச் செய்ய முடியும் என்பதை ட்ரம்ப் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே, காஸா, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் போரை அதிபராக இருக்கும் ட்ரம்ப் நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சொந்த நாட்டிலேயே தனக்கு யாராவது சூனியம் வைத்துக்கொள்ள விரும்புவார்களா... அதனால்தான் போர் நிறுத்ததுக்கான சமானாதப்புறாவை கக்கத்தில் வைத்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தார் ட்ரம்ப்.

இஸ்ரேல்:

ஈரானை பரம எதிரியாக கருதும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, `ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஈரான் மக்கள் உதவ வேண்டும். ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றால்தான் இந்தப் போர் முடிவுக்கு வரும்" என ஆவேசமாக உரையாற்றி டிவியிலும், சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக்கினார்.

`என்னவானாலும் அடிபணியமாட்டோம்' என உறுதியாக நின்ற ஈரான் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் கேட்டுக்கொண்டதாக அறிவித்தார் அதிபர் ட்ரம்ப்.

இந்தப் போர் முடிவு ஒப்பந்தத்துக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஈரான் கட்டமைக்க முயற்சித்து வந்த, இஸ்ரேலுக்கான இரண்டு அச்சுறுத்தல்களை அழித்திருக்கிறோம். ஒன்று அணு ஆயுதங்கள், மற்றொன்று 20,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள். நாம் இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இஸ்ரேல் விரைவில் அழிவை சந்தித்திருக்கும்.

நெதன்யாகு
நெதன்யாகு

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திட்டத்தை அழித்துவிட்டோம். இது ஈரானின் வரலாற்றில் மிகக் கடுமையான அடியை ஏற்படுத்திவிட்டது. ஈரானில் யாராவது இனி அணு சக்தி திட்டத்தை மீட்டெடுக்க முயன்றால், இதே உறுதியுடன், இதே சக்தியுடன் மீண்டும் செயல்படுவோம். நாம் ஹமாஸைத் தோற்கடித்து பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்" என ஈரான் மீதான போர் முடிந்துவிட்டது. ஆனால் காஸா மீதான தாக்குதல், அடக்குமுறை இன்னும் தொடரும் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஆபரேஷன் ரைசிங் லயன் மூலம், நெதன்யாகுவும் அவரது இராணுவமும் நாட்டின் சக்தியை வெளிப்படுத்தியதாக இஸ்ரேலிய மக்களின் நம்பிக்கை பலப்பட்டிருக்கிறது. இந்தப் போர் இஸ்ரேலை ராஜதந்திர ரீதியாகவும் வளர்ச்சியடைய செய்திருக்கிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த ட்ரம்பை ஒப்புக்கொள்ள வைத்ததன் மூலம், 'அமெரிக்கா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது' என்பதை ஈரானுக்கு மட்டுமல்ல உலகிற்கும் நிரூபித்திருக்கிறது இஸ்ரேல்.

இது எல்லாவற்றையும் விட இஸ்ரேலுக்கு கிடைத்த மற்றொரு ஆதாயம் காஸா விவகாரத்திலிருந்து கிடைத்த திசைதிருப்பல்.

போர் குற்றவாளி நெதன்யாகு:

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், திட்டமிட்ட பட்டினிப்போர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, கடந்த ஆண்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) . ஆனால், அப்போது அதிபராக இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலை ஆதரித்து ஐ.சி.சியின் கைது வாரண்டுகளுக்கான விண்ணப்பத்தை நீர்த்துப்போகச் செய்தார்.

சர்வதேச நீதிமன்ற கண்டனங்களுக்குப் பிறகும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதே குற்றங்களை தொடர்ந்து செய்துவருகிறார். உணவு, உதவிகளை கொண்டு செல்லும் லாரிகளை காஸா பகுதிகளுக்குள் நுழைவதைத் தடைசெய்து, காஸா மக்களை தொடர்ந்து பட்டினியால் கொலை செய்துவருகிறார்.

உணவு தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா
உணவு தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா

காஸாவுக்குள் இந்த ஆண்டு பிப்ரவரியில் 2 லட்சம் டன் உதவி சென்ற நிலையில், கடந்த சில மாதத்தில் 20 ஆயிரம் டன்களுக்கும் குறைவாகவே உதவிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்துக்கும் குறைவான உணவு லாரிகளே காஸாவிற்குள் நுழைந்திருக்கின்றன.

ACLED அமைப்பின் தரவுகளின் படி, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகத் தொடங்கிய இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் மட்டும் 42,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் மட்டும் கிட்டத்தட்ட 25,000 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அக்டோபர் 7, 2023 முதல் ஜூன் 13, 2025 வரையிலான 615 நாள்களில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 56,000 -க்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 17,000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.

காஸாவைத் தவிர, இந்தக் காலகட்டத்தில் ஏமன், லெபனான், ஈரான் மற்றும் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. இப்படி குற்றங்களை செய்த, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐ.நா சபையும் கண்டித்த நெதன்யாகு அமெரிக்காவின் ஆதரவால் தொடர்ந்து தப்பிக்க வைக்கப்படுகிறார்.

எனவே, இந்தக் குற்றங்கள் எல்லாம், ஈரான் மீதான தாக்குதல் மூலம் திசை திருப்பப்பட்டிருக்கிறது என்கிறது firstpost. இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்ரேலில் நெதன்யாகுவின் அரசியல் பலத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த லாபங்களை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில் நெதன்யாகு அறுவடை செய்துக்கொள்வார் எனக் கருதப்படுகிறது.

உணவு தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா
உணவு தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தைகள் - காஸா

ஈரான்:

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவுகள், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அறிக்கைகளை வைத்துப் பார்த்தால், இந்தப் போரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ஈரான்தான் என்பதுபோல தோற்றம் இருக்காலாம். ஆனால் அதுவும் உண்மையல்ல.

இந்தப் போரின் முக்கியக் காரணங்களில் ஒன்று 'ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது' என்ற குற்றச்சாட்டுதான். ஆனால், அமெரிக்காவின் B-2 குண்டுகளாலும், இஸ்ரேலின் இத்தனைத் தாக்குதல்களாலும் அணு ஆயுத தளங்களை எதுவும் செய்ய முடியவில்லை எனபதுதான் நிதர்சன உண்மை.

``மூன்று அணுசக்தி தளங்களின் முக்கிய பகுதிகளையும் அமெரிக்காவின் குண்டு பாதிக்கவில்லை. இந்தப் போரின் பாதிப்பால் அணுசக்தி திட்ட செயல்பாடுகள் சில மாதங்கள் தள்ளிப்போயிருக்கிறது அவ்வளவுதான்" என ஒரு ரகசிய அறிக்கை கண்டறிந்துள்ளதாக CNN மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை வைத்துதான் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ``எங்கள் நாட்டிற்கு எதிரான போர் அதன் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. அவர்கள் எங்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்று நான் கூறவில்லை, ஆம், பாதிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் எங்கள் அனைத்து திறன்களையும் அழிக்கவும், அவர்கள் கொண்டிருந்த வேறு இலக்குகளை முற்றிலுமாக அகற்றும் அவர்களின் முக்கிய இலக்கையும் அவர்கள் அடையவே இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

மேலும், இந்தப் போர் ஈரான் தனது 'எதிர்ப்பு' மனநிலையை வெளிக்கொண்டுவர உதவியிருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினாலும் அதற்கு பதிலடி கொடுத்து, இஸ்ரேலுக்கு சமமான நாடு ஈரான் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.

மேலும், அமெரிக்காவின் அல் உதெய்த் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் செய்தித் தொடர்பாளர், ``எங்கள் எதிரிகளை தாக்கிவிட்டு தப்பிக்கும் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நாங்கள் எச்சரிக்கிறோம்" எனப் பேசினார். இதன் மூலம், தனக்கு எதிராக செயல்படும் எந்த நாட்டையும் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் உணர்த்தியிருக்கிறது. இந்தப் போர் ஈரான் குடிமக்களிடமும் தனது இராணுவ ஆதிக்கத்தை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறது.

ஆக இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு நாடும் அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தங்களுக்கான லாபத்தை அடைந்துகொண்டனர். மொத்தத்தில், இந்தப் போரில் எந்த நாடும் தனிப்பட்ட வெற்றியைப் பெறவில்லை என்பது புலனாகிறது. ஆனால், உலகில், நாட்டில், மாநிலத்தில், ஊரில் எந்த அரசியல் லாபத்துக்கும் பலி கொடுக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள்தான்.

Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியா வம்சாவளியான ஜோரன் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.நவம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லி... மேலும் பார்க்க

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? - அதிர்ச்சி தரும் ஆய்வு!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்தத... மேலும் பார்க்க

``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொல்லும் தகவல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது, ஏதேனும் உதவி வேண்டுமா என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது, அப்போது... மேலும் பார்க்க

``வெள்ளித் தட்டில் 600 பேருக்கு விருந்து; ஒரு பிளேட் சாப்பாடு ரூ.5000'' - அரசு செலவில் ஆடம்பரமா?

மும்பையில் பாராளுமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்த கூட்டம் மகாராஷ்டிரா சட்டமன்ற கட்டிடத்தில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து 600 பேர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை பாரா... மேலும் பார்க்க

`அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; திமுக வீட்டுக்கு போவது உறுதி' - வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர் நெருக்கடி காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறந்... மேலும் பார்க்க