மறக்க முடியாத பயணம்..! பாட்டல் ராதா குறித்து சஞ்சனா நெகிழ்ச்சி!
WHO: 'அடுத்தடுத்து விலகும் அமெரிக்கா, அர்ஜென்டினா... அதிகரிக்கும் சீனா-வின் ஆதிக்கம்?' | Explained
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று, 'உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது' குறித்ததாகும்.
'உலக சுகாதார நிறுவனம் கொரோனா பேரிடரை சரியாக கையாளவில்லை. அது காலத்திற்கு தேவையான மாற்றங்களோடு தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை. அதன் உறுப்பினர் நாடுகளின் ஆதிக்காத்தால், அதனால் தனித்து செயல்பட முடியவில்லை. மேலும், அமெரிக்காவில் இருக்கும் மக்கள்தொகைக்கேற்ப அல்லாமல், அதிக தொகையை அமெரிக்காவிடம் இருந்து அந்நிறுவனம் பெறுகிறது' என்று ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்தின் மீது புகார்களை அடுக்கி வெளியேறும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/ot2degvw/ILHJ4LKTEVCFBI7VNSG2X5N5T4.avif)
மாற்றம் உண்டு, முயற்சி இல்லை!
அந்த ஒப்பந்தம் படி, அடுத்த ஆண்டு அதாவது 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும். இடையில், ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று மாறினாலும், அதற்கான முயற்சிகளை பெரிதாக எதுவும் எடுக்கவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேற துடிப்பது ட்ரம்பிற்கு புதிதல்ல. அவர் அமெரிக்க அதிபராக முதல்முறை பதவியேற்றப்போதும், இந்த முயற்சிகள் நடந்தன. ஆனால், ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தப் பிறகு, அந்த முயற்சிகளை கைவிட்டார்.
ட்ரம்ப் பிடித்த அதே ரூட்டை, தற்போது அவரது நண்பரான அர்ஜென்டினா அதிபர் சேவியர் செரார்தோ மிலேய் பிடித்துள்ளார். அவரும் இப்போது உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதுக்குறித்து அர்ஜென்டினா அதிபர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கூறியுள்ளார். இந்தத் தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
அதே காரணம்..!
நண்பரின் ரூட்டை பிடித்ததுப்போலவே, நண்பரின் காரணத்தையே உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதற்கும் கூறியுள்ளார். ஆம்...அர்ஜென்டினா அதிபரும் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதற்கு அதன் நிர்வாகம் சரியில்லை என்றும், கொரோனா பேரிடரை சரியாக கையாளவில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து நீங்குவது அமெரிக்காவிற்கு மட்டும் தீங்கல்ல. அது உலக நாடுகள் அனைத்தையுமே பாதிக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/0hk1r61r/download__43_.jpg)
அமெரிக்காவுக்கு மட்டுமல்ல...
உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா அளிக்கும் நிதி நிச்சயம் மிகப்பெரிய தொகை தான். இந்தத் தொகை வெறும் அமெரிக்காவுக்கு மட்டும் பயன்படாது. உலக நாடுகள் அனைத்திற்குமே பயன்படும். முக்கியமாக,சிறிய நாடுகளால் சுகாதாரத்திற்கு என பெரிய தொகையை ஒதுக்கி மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியாது. அவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுக்கும் நிதியில் உலக சுகாதார நிறுவனம் பெரிதாக உதவும். இப்போது, திடீரென்று, அமெரிக்காவின் பெரிய அளவிலான நிதி தடையாகும் போது, உலக சுகாதார நிறுவனம் ஆட்டம் காணும். அதில் வருமானம் குறைந்த நாடுகள் அதிகம் பாதிப்படையும்.
சட்டப்படி...
ஆனால், இந்த விஷயத்தில் அர்ஜென்டினாவின் நிலையே வேறு. அர்ஜென்டினா உலக சுகாதார நிறுவனத்திற்கு கொடுக்கும் நிதி வெகு சொற்பமே. இதனால், உலக சுகாதார நிறுவனத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், அர்ஜென்டினாவை எடுத்துகொண்டால், அவர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதன் மூலம் மருத்துவ சம்பந்தமான விஷயங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் அந்த நாடு பின்தங்கலாம்.
அர்ஜென்டினாவின் சட்டப்படி, அதிபர் நினைத்தவுடன் அவ்வளவு எளிதாக அந்நாடு உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிட முடியாது. அந்த நாடு சட்டத்திலேயே அவர்கள் உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அவர்கள் வெளியேற வேண்டுமானால், இன்னொரு சட்டத்தை உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/d7eb9171-911e-418b-88c8-242345599cc8/us.jpg)
வேற மாதிரி!
இந்த சிக்கல் அமெரிக்காவிற்கும் தான் உள்ளது. ஆனால், அது வேற மாதிரி. ட்ரம்ப் நினைத்தவுடன் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகிவிட முடியாது. அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்னரே, அதற்கான அறிவிப்பை தர வேண்டும். அப்படி பார்த்தால், அடுத்த ஜனவரி மாதம் வரை நேரம் உள்ளது. இதற்குள் அமெரிக்காவின் காங்கிரஸோ (நம் நாட்டின் நாடாளுமன்றம் போல, அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றம்), மக்களோ, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், ட்ரம்ப் இந்த முடிவை செயல்படுத்த முடியாது. ஆனால், அவரால் ஒன்றே ஒன்று செய்ய மட்டும் செய்ய முடியும். அது அவர் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், நிதியை மட்டும் நிறுத்தி வைக்க முடியும்.
அமெரிக்கா சார்பாக ட்ரம்ப் எடுத்த முடிவை, அர்ஜென்டினா அதிபர் எடுத்தது அவ்வளவு சரியல்ல. ட்ரம்ப் எப்போது வேண்டுமானாலும் தன் நிலைபாட்டை மாற்றுவார். மேலும், அவர் எடுக்கும் முடிவுகளால் அமெரிக்கா சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் எளிதாக் சரி செய்துவிடுவார்கள்...கடந்துவிடுவார்கள். ஆனால், அர்ஜென்டினா நிலைமை அப்படி இல்லை. அர்ஜென்டினா நிலை சற்று பிசகினாலும், அது சந்திக்கும் பிரச்னை மிகப்பெரியதாக இருக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
துண்டுப்போடும் சீனா!
இப்படி ஒவ்வொரு நாடாக உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து நீங்கினால், அதன் பெயர் கெடும். மேலும், அனைத்து நாடுகளை சுகாதாரத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு தடுமாறுவது உலக நாடுகளுக்கே அது ஆபத்து ஆகும்.
இப்போது அமெரிக்கா அந்த நிறுவனத்தில் விலகியிருப்பது சீனாவிற்கு சிவப்பு கம்பளத்தை விரித்திருக்கிறது. அமெரிக்கா அந்த இடத்தில் இருந்து விலகும்போது, அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது சீனா. அமெரிக்கா விலகும்போது, தானாக சீனா அந்த இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதற்கு இப்போதே அடித்தளம் அமைக்க தொடங்கிவிட்டது சீனா. ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த உடனேயே, சீனா தான் எப்போதும் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்போம் என்று அறிவித்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/bee6fe1f-78ef-44d9-a822-13ade333abb8/china___taiwan.jpg)
தொடரலாமா?
சீனா உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய அங்கம் பெறும்போது, இந்தியா உலக சுகாதார நிறுவனம் மூலம் பெறும் பலன்கள் பாதிப்படையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்தியா முன்னிலைப்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். நேரடியாக பெரும் பாதிப்பு இல்லையென்றாலும், மறைமுகமாக நிச்சயம் இந்தியா பாதிப்புகளை சந்திக்கும் என்கிறார்கள்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் மிகுந்த காலத்திலும், அந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக எல்லாம் செயல்பட்டதில்லை என்ற கோபம் தான் ட்ரம்ப் வெளியேறுவதற்கான காரணம் என்கிற வாதமும் இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கம் வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
'உலக சுகாதார நிறுவனம் இப்படியே தொடரலாமா?' என்றால் 'கூடவே கூடாது'. சுகாதாரத்தில் உலக நாடுகள் அனைத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக இந்த நிறுவனம் இருக்கிறது. அதனால், இன்னும் தன்னை புதுமைப்படுத்திக்கொள்ளவும், சுதந்திரமாக்கி கொள்ளவும் வேண்டும்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play