எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு: ராமதாஸ் கண்டனம்
அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சிகளுக்கு தமிழக தோ்தல் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும், தோ்தலில் முக்கியப் பங்காளராக விளங்கும் அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறியவும் அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் கோரியிருந்தது. அதன்படி,
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி அதன்வழியே கருத்துகளைப் பெற தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் முடிவு செய்துள்ளாா். இதற்காக இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் அழைப்பு?:
தமிழகத்தில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 12 உள்ளன. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும், தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்டுள்ளன. இப்போது விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா் ஆகிய இரண்டு கட்சிகளும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க அந்தக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.