`எதிரிகள் விலகிப் போவார்கள்' - 'ரணபலி' முருகனைத் தரிசித்த பின் நடிகை மதுமிதா
சென்ற மாதக் கடைசியில் அதாவது சிவராத்திரியன்று புதுச்சேரி அம்பலத்தடியார் மடம் போய் நாகலிங்கேஸ்வரரைத் தரிசித்து வந்தார் நடிகை மதுமிதா,
'வருடத்துக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்படும், சிவன் கைப்பட பனை ஓலையில் எழுதிய திருவாசகத்தைப் பார்த்து வரப்போவதாக அப்போது நம்மிடம் பேசியிருந்தார். இதோ இந்த மாதம் இதுவரை போய் வராத ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் 'ரணபலி' முருகன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

'ஒரே ஆன்மிக ட்ரிப்பா இறங்கிட்டீங்களே' என்றபடி பேச்சை ஆரம்பித்தோம்.
''கோயில்களுக்குப் போய் வர்றதெல்லாம் ஜாலியா டூர் போயிட்டு வர்ற மாதிரி நாம திட்டமிட்டு நடக்கறதில்ல. அதுவா அமையணும். இன்னும் சொல்லப்போனா, நீங்க எந்தக் கடவுளைக் கும்பிட நினைக்கிறீங்களோ, அந்தக் கடவுள் உங்களை வரச் சொல்லி க்ரீன் சிக்னல் தந்தா மட்டுமேதான் அங்க நீங்க நுழையமுடியும். நான் இதை உறுதியா நம்பறேன். யோசிச்சுப் பாருங்க, சிலர் சில கோயில்களுக்குப் போகணும்னு வருஷக்கணக்கா நினைச்சிட்டு இருப்பாங்க. ஆனா அங்க போகவே முடியாதபடி ஏதாவதொரு தடங்கல் வந்துட்டே இருக்கும். அதெல்லாம் இப்படித்தான்.
ஆழமான இறை நம்பிக்கை வந்திடுச்சுன்னாலே நாம நினைக்கிறது ஆட்டோமேடிக்கா நடந்திடும். என் வாழ்க்கையில அதை அனுபவிச்சிருக்கேன். நிறைய உதாரணங்களும் இருக்கு.
சிவராத்திரி அன்னைக்கு ஏதாவதொரு சிவன் கோயில்ல தங்கறது என் வழக்கம்தான். அந்த வகையில் இந்த வருஷம் புதுச்சேரி அம்பலத்தடியார் மடச் சித்தரைப் பார்க்கிற வாய்ப்பு வந்தது.

இப்ப முருகப் பெருமானைத தரிசிக்கக் கிடைச்ச வாய்ப்பையும் சும்மா சொல்லக்கூடாது. எனக்கே எனக்காய் அதுவா அமைஞ்ச வாய்ப்புன்னுதான் சொல்வேன்.
நான் நடிச்சிட்டிருக்கிற சமுத்திரக்கனி சார் படத்தின் ஷூட்டிங் இப்ப ராமநாதபுரம் பகுதியில் போயிக்கிட்டிருக்கு. சென்னையிலிருந்து ஷூட்டிங் கிளம்பியபோதே இந்த முறை உத்திரகோசமங்கை போயிட்டு வரணும்கிறதுதான் என் மனசுல இருந்த திட்டம். ஏன்னா, இங்குள்ள சிவனைத்தான் இதுவரை பார்க்கல.
ஆனா ஷூட்டிங் தொடங்கின அன்னைக்கே சிவன் புள்ளை முருகன் 'இந்தத் தடவை என்னைப் பார்க்கதான் வரணும்'னு சொல்லிட்டார். ஷூட்டிங் ஒரு முருகன் கோயில்ல பூஜை போட்டுதான் தொடங்குச்சு.
பொதுவா நான் எந்த புது ஊருக்குப் போனாலும் அந்தப் பகுதியில இருக்கிற கோயில்கள் பத்தி விசாரிப்பேன். அப்படித்தான் பூஜை போட்ட முருகன் கோயில் குருக்கள்கிட்ட பேச்சுக் கொடுத்தேன்.
அவர்தான் 'ரணபலி' முருகன் பத்திச் சொன்னார். அதாவது எங்க ஷூட் நடந்துக்கிட்டிருந்த பகுதியில இருந்து ரொம்பப் பக்கத்துலயே இருந்த பெருவயல்ங்கிற இடத்துல எழுந்தருளியிருக்கிறார் ரணபலி முருகன்.

தொடர்ந்து சுமார் 300 வருஷங்களுக்கு முன்னாடி இந்த கோயில் உருவான வரலாறு குறித்தெல்லாம் தேடிப் பிடிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது கடல்ல இருந்து எடுக்கப்பட்ட 'சத்ரு சம்ஹார வேல்' இந்தக் கோயிலின் ஸ்பெஷல்.
முருகனே கடல்ல வேல் இருக்கிற இடத்தைக் காட்டிய பிறகு எடுத்து வந்ததாச் சொல்லுது ஆலயத்தின் தல வரலாறு.
கடல்ல இருந்து எடுக்கப்பட்ட அந்த வேலிலேயே முருகன் வீற்றிருக்கிறார். இந்த வேலை வருடத்தின் சில தினங்கள்ல மட்டுமே பக்தர்கள் பார்க்க அனுமதிக்கிறாங்களாம். மத்த நாட்கள்ல ராமநாதபுரம் அரண்மனை நிர்வாகத்தின் பாதுகாப்பிலிருக்கும்னு சொல்றாங்க.
எங்க ஷூட்டிங் தொடங்கின நாள்லயும் வேல் பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது.
இப்படியொரு தகவல் தெரிஞ்ச பிறகு நான் சும்மா இருப்பேனா? அந்த நாள் ஷூட் முடிஞ்சதுமே கிளம்பிட்டேன். நல்ல தரிசனம். சாமி கும்பிட்டுட்டுத் திரும்பியாச்சு. இந்தக் கோயிலில் முருகனை தரிசிச்சுத் திரும்பினா திருச்செந்தூர், ராமேஸ்வரம் ரெண்டுக்கும் போய் வந்த புண்ணியம் கிடைக்கும்னும் ஒரு ஐதீகம் இருக்கறதாகவும் சொல்றாங்க.

எது எப்படியோ ரணபலி முருகனைத் தரிசிட்டு வந்தாச்சு'' என்றவர், 'இந்தக் கோயிலுக்குப் போய் திரும்பினா ரெண்டு விஷயம் நடக்கும்கிறாங்க. ஒண்ணு நம்ம உடல், மனம், வாழ்க்கையில் ரணங்களை அனுபவிச்சிட்டிருந்தா அது காணாமப் போகுமாம். அடுத்து எதிரிகள் விலகிப் போவார்கள்' என்கிறார் மதுமிதா
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...