குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென...
அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; அரசு நடவடிக்கை
'போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்தார்' என்று, முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்த நிலையில் தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்புவனத்தில் போலீசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த, அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உயர் நீதிமன்றம் இச்சம்பவம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், திருப்புவனம் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
மானாமதுரை காவல் உட்கோட்ட தனிப்படை தலைமைக்காவலர் கண்ணன் எப்.ஐ.ஆரில் அளித்த தகவலில், "மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, மடப்புரம் கோயிலில் சாமி கும்பிட வந்த நிக்கிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டோம்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் மீது சந்தேகம் எழுந்ததால் விசாரணைக்காக அழைத்துச் சென்று, காரை யார் பார்க்கிங் செய்தது எனக் கேட்டபோது, சரவணன், அருண், தினகரன் என அஜித்குமார் மாறி மாறி பெயர்களைத் தெரிவித்தார். ஆனால், அவர்களை அழைத்து விசாரித்தபோது, தாங்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும், காரின் சாவி முழுமையாக அஜித்குமாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து அஜித்குமாரின் தம்பி நவீனை விசாரித்தபோது, தான்தான் நகையை எடுத்ததாக ஒப்புக்கொண்ட அஜித்குமார், திருடிய நகைகளை மடப்புரம் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்திருப்பதாகக் கூற, அங்குச் சென்று தேடியபோது நகை கிடைக்கவில்லை.
அந்த நேரம் விசாரணையின்போது, அஜித்குமார் தப்பி ஓடியதால் கீழே தவறி விழுந்தார், பின்னர் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது, உடனே திருப்புவனம் மருத்துவமனைக்கும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றோம்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.
உடற்கூராய்வு சோதனையில் அஜித்குமார் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில் எப்.ஐ.ஆரில் வலிப்பு வந்து இறந்தகாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று இரவு 5 பேர் கைது செய்யப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.