வரதட்சணை: 'என் புள்ளைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது' - கண்ணீர் விட்டு கதறும் தந்தை
திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தனது மகளின் மரணம் குறித்து தந்தைப் பேட்டி அளித்திருக்கிறார். “என் மகள் வாழ்க்கை வீணாகி போய்விட்டது. நல்ல குடும்பம், பாரம்பரிய குடும்பம் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். பண்ணாதக் கொடுமையெல்லாம் பண்ணி இருக்கிறார்கள்.

கல்யாணம் நடந்த 15 நாளிலேயே என் மகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். என் மகள் சொல்வதையெல்லாம் கேட்டால் கண்ணில் இரத்தம் வந்துவிடும். அந்த அளவிற்கு உடல் ரீதியான, பண ரீதியானக் கொடுமைகள் செய்திருக்கிறார்கள்.
நான் அனுசரித்து இரு என்று சொன்னேன். பிறகு எனது மகள் வீட்டிற்கு மாமியாரை வரச்சொல்லி பேசினார். இனிமேல் இந்தத் தவறு நடக்காது. என் பையன் இப்படி செய்வான் என்று நானே நினைத்து பார்க்கவில்லை என்று சம்பந்தி சொன்னார். இனிமேல் இந்தத் தவறு நடக்காது என்று கூறி என் மகளை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

திரும்பவும் பிரச்னைதான். மன ரீதியாக நிறையக் கொடுமைகள் செய்திருக்கிறார்கள். நடந்த எல்லாவற்றையும் ஆடியோவாகப் பதிவிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டாள். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவ்வளவு அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். என் பிள்ளைக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. நீதி கிடைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார்.