அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்), வியாழக்கிழமை(மே 29) மெதுவாக வடக்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.
தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், வியாழன், வெள்ளி (மே29, 30) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதி கனமழை (200 மி.மீ.க்கும் அதிகமாக) பெய்ய வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில்! பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்!
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.