திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் கவனமாக நீராட அறி...
விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் ஜமாபந்தி நடத்தப்படுவதால் இந்த மாதத்துக்கான கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன், செயலர் முருகன் மற்றும் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்தனர். தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜமாபந்தி நடத்தப்படுவதன் காரணமாகத்தான் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் கண்டிப்பாக கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்ட விவசாயிகள், மற்ற மாவட்டங்களில் கூட்டம் நடைபெறும்போது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.