PBKS vs MI: 'மும்பைக்குத் தோல்வியைத் தந்த 3 முடிவுகள்!'- இறுதிப்போட்டிக்கு எப்பட...
ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி
ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி வருகிறார். கட்சிக்கு நான்தான் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார்.
இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் 2-வது நாளாக அன்புமணி தலைமையில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம் கலந்து கொண்டனர். கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய அன்புமணி,
"கட்சிக்கு கொள்கை வழிகாட்டி ஐயா ராமதாஸ். அவர்தான் நம் குல தெய்வம், சமூக நீதி உள்ளிட்ட அவரது வழியைப் பின்பற்றி வெற்றி பெறுவோம். கட்சியின் தலைவராக நான் செயல்படுவேன். என்னால் இப்போது சுதந்திரமாக செயல்பட முடிகிறது. நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
கட்சியில் உள்ள சின்ன சின்ன குழப்பங்களை சரிசெய்து விடுவேன். வெளியே சொல்ல முடியாத மன வேதனை என் மனதிலும் உள்ளது. தைரியமாக இருங்கள், உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. தமிழக மக்களின் உரிமைகளை மீட்க விரைவில் நடைபயணம் செல்ல உள்ளேன்.
தூசியைத் தட்டுவதுபோல விமர்சனங்களை தட்டுங்கள். நீங்கள்தான் இந்த கட்சி. மற்றபடி, கட்சி யார் சொத்தும் கிடையாது. நிர்வாகிகளை யாராலும் மாற்ற முடியாது.
நம் கட்சியை பலப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஏற்கெனவே இருப்பவர்கள் அட்டையை புதுப்பிக்க வேண்டும். பாமக தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எண்ணம். பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மனு வாங்குகின்ற கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்.
நிச்சயமாக வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்" என்று கூறியுள்ளார்.