அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244
''முதலிரவுக்குப் பின்னர் ஆயிரம் ஆயிரம் இரவுகள் இருக்கின்றன. அதனால், முதல் இரவிலேயே முழு தாம்பத்திய உறவும் நடந்துவிட வேண்டும் என்கிற அவசரம் தேவையில்லை என்று, புதிதாக திருமணமானவர்களுக்கு சொல்கிறோம். அந்த ஆயிரம் ஆயிரம் இரவுகளில், ஒரு கணவனுடைய தாம்பத்திய வேகம் எப்படி இருக்க வேண்டும்; அது எப்படி இருந்தால் மனைவிக்குப் பிடிக்கும் என்று சொல்லித் தந்திருக்கிறோமா என்றால், கிட்டத்தட்ட இல்லை. ஆனால், காமசூத்ரா சொல்லிக் கொடுத்திருக்கிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுபற்றி விவரித்தார்.

''தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறவியிலேயே ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஆண், மனசுக்குப் பிடித்த மனைவியைப் பார்த்தவுடனே உணர்ச்சிவசப்படுவான். அடுத்து, ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு விடும். உறவு கொண்டு விந்து வெளியேறவுடன் உணர்ச்சி அடங்கி நார்மலாகி விடுவான். ஆணின் இந்த நிலையை ஸ்விட்ச் போட்டவுடனே எரிகிற பல்புக்கு ஒப்பாக சொல்லலாம்.
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் மெதுவாகத்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். மெதுவாகத்தான் தாம்பத்திய உறவுக்கும் தயாராவார்கள். உறவுகொண்டு உச்சக்கட்டம் அடைந்த பிறகும் அந்த உணர்வு சிறிது நேரம் இருக்கும். ஆண்களைப்போல சட்டென்று பல்ப் ஆஃப் ஆகாது பெண்களுக்கு. இதனால்தான், நான் பெண்களின் செக்ஸ் உணர்வை அயர்ன் பாக்ஸுக்கு ஒப்பிடுவேன்.

ஆண்கள் உறவில் ஈடுபட ஆரம்பித்தவுடன் அதை சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு.
இதிலும், விந்து முந்துதல் பிரச்னை இருக்கிற ஆண்கள், 'ரொம்ப நேரம்தான் செய்ய முடியலை; நிறைய முறையாவது செய்யலாம்' என்று மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டு நார்மல் ஆண்களைவிட இன்னும் வேக வேகமாக உறவை முடிக்க பார்ப்பார்கள். இது இன்னும் பிரச்னையை அதிகப்படுத்தவே செய்யும். இதனால், ஒரு நிமிடத்திலேயே வெளியேறி விடுகிற விந்து இன்னும் சீக்கிரமாக முந்தி விடும். இது இன்னும் சிக்கலை ஏற்படுத்தி விடும். அந்த நேரத்தில் ஆண்களின் மனநிலைமையை விளக்குவது மிக மிக கடினம்.
இந்த இடத்தில்தான் நான் இப்போது சொல்லப்போகிற பாயிண்ட் எல்லா ஆண்களுக்குமே உதவியாக இருக்கும். பெண்களுக்கு, தாம்பத்திய உறவை ரொம்ப நிதானமாக, ஜென்டிலாக கொண்டு போகிற ஆணைத்தான் மிகவும் பிடிக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பெண்கள் மெதுவாகத்தான் உணர்ச்சிவசப்படுவார்கள்.
கணவன் இப்படி நிதானமாக உறவு மேற்கொள்கையில், எண்டார்பின், ஆக்சிடோசின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் அவர்களுடைய உடலில் வெளிப்படும். இதனால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இதய நலமும் மேம்படும். பெண்களுக்கு ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரைக்கும் தேவைப்படும். ஆனால், ஆண்களால் அவ்வளவு விந்து வெளியேறாமல் உறவுகொள்ள முடியாது.
இப்படி நிதானமாக உறவுகொள்ளும்போது, கணவனைப்போல மனைவியும் ஆர்கசம் அடைவார். சில நேரம், ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகூட அவர் ஆர்கசம் அடையலாம். படுக்கையறை ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது. அங்கு வெற்றி, தோல்வியும் கிடையாது. அதனால், தாம்பத்திய உறவில் நிதானமாகவே ஈடுபடுங்கள் கணவர்களே... அதுதான் உங்கள் வாழ்க்கைத்துணைக்குப் பிடிக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...