கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
அனைத்து மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது மத்திய அரசு: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்
கொச்சி : வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்காக அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
கொச்சியில் நடைபெற்ற கேரள சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
உலகின் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வேறு பிற நாடுகளைவிட வேகமான வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 35 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
பஹ்ரைனுடன் விரைவில் தடையற்ற வா்த்தக பேச்சுவாா்த்தை தொடங்க இருக்கிறது. சா்வதேச முதலீட்டாளா்களுக்கு சிறந்த இடமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மத்திய பாஜக அரசுக்கும், கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் கொள்கைரீதியாக பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கேரளத்துடன் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது என்பதை உணா்த்தவே நான் இங்கு வந்துள்ளேன். கேரளம் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறுகிறது. இதற்கு மத்திய அரசு துணை நின்று வருகிறது. கேரளம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ‘கேரளத்தில் ரூ.50,000 கோடி செலவில் 896 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன’ என்றாா்.
அதானி குழுமம் ரூ.30,000 கோடி முதலீடு:
இந்த நிகழ்ச்சியில் பேசிய அதான் போா்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநா் கரண் அதானி, ‘கேரளத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.30,000 கோடியை அதானி குழுமம் முதலீடு செய்ய இருக்கிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் சிறப்பாக மேம்படுத்தப்பட இருக்கிறது.
சரக்குப் போக்குவரத்து, இணைய வழி வா்த்தக மையமாக கொச்சி உருவாக்கப்படும். இங்குள்ள சிமெண்ட் ஆலையின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்படவுள்ளது’ என்றாா்.