அமெரிக்கா: நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்த விடியோ பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவுக்குட்பட்ட லாஸ் குரூசெஸ் பகுதியிலுள்ள பூங்காவில் இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் 19 வயது இளைஞர்கள் இருவரும், 16 வயது சிறுவன் ஒருவரும் பலியானதாக நியூ மெக்சிகோ காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 16 முதல் 36 வயதுடைய 14 பேர் படுகாயம் அடைந்து நகரில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பூங்காவில் இருந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டின்போது எடுத்த விடியோ பதிவுகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் காவல் துறை சுட்டிக்காட்டியது.
லாஸ் குரூசெஸ் நகரின் கவுன்சிலரும் மேயருமான ஜோஹன்னா பென்கோமோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது,
நமது நகரத்தில் இதுபோன்று நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது நடந்துள்ள சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நமது நகரத்தில் நடப்பது கனவு போன்று உள்ளது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிராத்த்தனை செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்ததங்கள் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!