தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
இசை கேட்டு வளர்ந்த கோழிக்கறி உணவு! விலை ரூ. 5,500
சமைத்த கோழிக்கறி உணவுக்கு தொழிலதிபர் ஒருவர் ரூ. 5500 பணம் செலுத்தியுள்ளார். இது குறித்து அந்த உணவகத்திடம் கேட்டபோது அவர்கள் அளித்த பதில், பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, அந்தக் கோழிக்கு நீருக்கு பதில் பால் கொடுத்துவந்ததாகவும், இசைக் கேட்டு வளர்க்கப்பட்டதாகவும் உணவகம் பதில் அளித்துள்ளது. உணவகத்தின் இந்த பதிலை அந்தத் தொழிலதிபர் சமூக வலைதளத்தில் கேலியாகப் பகிர்ந்துள்ளார்.
சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள உணவகத்தில் தொழிலதிபர் ஒருவர் அரை கோழிக் கறியை உணவாக வாங்கி உண்டுள்ளார். அதற்குரிய தொகையாக 480 யுவான் ( இந்திய ரூபாய் மதிப்பில் 5,500) என ரசீதில் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்துபோன அத்தொழிலதிபர் இது குறித்து உணவக ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அந்தக் கோழி இசை கேட்டு வளர்ந்ததா? தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்த்தீர்களா? என கோழியின் பின்புலம் குறித்தும் கேலியாகக் கேட்டுள்ளார்.
இதற்கு உணவக ஊழியர், இதற்கு ’ஆமாம்’ என பதிலளித்து, இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்ததாகக் கூறியுள்ளார். நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மார்ச் 14ஆம் தேதி சமூக வலைதளத்தில் தொழிபதிபர் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டதால், இது குறித்து பல்வேரு விதமான கருத்துகள் எழுந்துள்ளன.
உண்மை என்ன?
சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்த கோழி என்பது, அரிசி போன்ற தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டின் சாறு மற்றும் அம்மலரின் இதழ்களை உணவாகக் கொடுத்து வளர்க்கப்படுகிறது. இதனை சீன செய்தி நிறுவனமான செளத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும், இது எம்பரர் சிக்கன் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் சுவை மற்றும் நிறத்துக்காக சீன உணவகங்கள் பலவும் இந்த வகைக் கோழிக்கறியை உணவகத்தில் பயன்படுத்துகின்றன.
உணவகங்களில் இந்த வகைக் கோழிக்கறிக்கு ஒரு கிலோ 200 யுவான் (ரூ. 2,300) முழு கோழி 1000 யுவான் (ரூ. 11,500) வசூலிக்கப்படுகிறது.
இந்த வகைக் கோழிகள் உண்மையில் பாரம்பரிய இசை ஒலிகளுக்கு மத்தியில் வளர்க்கப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பால் கொடுப்பதில்லை.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கோழிக் கறியை அதன் சுவையை விட, அதற்காகச் சொல்லப்படும் கதைகளின் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது என்றும்,
சீனாவில் பல்வேறு பகுதிகளில் வளரும் கோழிகள், ஷாங்காய்யில் மட்டும் தனித்தனி விநோத கதைகளுடன் அதிக விலைக்கு விற்பனையாவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?