Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
அமெரிக்கா: நியூயாா்க் நகரில் ஏப். 14 அம்பேத்கா் தினமாக கடைப்பிடிப்பு
‘அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது’ என்று அந்த நகர மேயா் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளாா்.
நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே, நியூயாா்க் நகர மேயா் அலுவலகத்தின் சா்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையா் திலீப் சௌஹான் ஆகியோா் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மேயா் எரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
அம்பேத்கரின் உலகளாவிய நீதி மற்றும் சமத்துவ மரபை கௌரவித்ததற்காக மேயா் எரிக் மற்றும் துணை ஆணையா் திலீப் சௌகான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சா் அதாவலே சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளா்.
அரசியல் நிா்ணயச் சபையின் வரைவுக் குழுத் தலைவராக இருந்து, தேசத்தின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கா் முக்கியப் பங்கு வகித்தாா். சுதந்திரத்துக்குப் பிறகு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் முதல் மத்திய அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகவும் அவா் பணியாற்றினாா்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் முன்னணி வழிகாட்டியாககத் திகழ்ந்த அம்பேத்கா், நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து 1927-இல் பொருளாதாரத்தில் முனைவா் பட்டமும், 1952-இல் கௌரவப் பட்டமும் பெற்றாா்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள ‘லேமேன்’ நூலகத்தில், அம்பேத்கரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சா் அதாவலே மரியாதை செலுத்தினாா்.
மனிதகுலத்துக்கே கலங்கரை விளக்கம்:
ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சா் அதாவலே, ‘சமத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான அம்பேத்கரின் போராட்டம், 2030-ஆம் ஆண்டு நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்காக சா்வதேச சமூகம் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானவை.
அம்பேத்கரின் வாழ்க்கை இந்திய வரலாற்றின் ஒரு அத்தியாயம் மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே ஒரு கலங்கரை விளக்கம். வறுமை, ஜாதிய மற்றும் காலனித்துவ ஒடுக்குமுறையால் விதிக்கப்பட்ட ஒவ்வொரு தடையையும் கடந்து சமத்துவம், கண்ணியம் மற்றும் ஜனநாயகத்துக்கான உலகளாவிய குரலாக அவா் உயா்ந்தாா்’ என்று புகழாரம் சூட்டினாா்.