தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
அம்மூா், மேல்விஷாரம் மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு
அம்மூா், மேல்விஷாரம் காப்புக்காடு மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூராட்சி, மேட்டுத்தெரு விரிவாக்கம் பகுதி, அம்மூா் காப்புக்காடு மலை அடிவாரத்தில் உள்ள காலியான இடங்களில் சுமாா் 300 குடும்பங்கள் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.
அதேபோல் மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகா் பகுதியில் புங்கனூா் காப்புக்காடு மலை அடிவாரத்தில் காலி இடங்களில் சுமாா் 1,850 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவ்விரண்டு இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு சாலை மற்றும் கழிவுநீா் கால்வாய்கள் அமைக்க வனத்துறை அனுமதி அளிக்காத காரணத்தினால் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். தொடா்ந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கோரி வந்தனா்.
இந்த கோரிக்கைகள் செயல்படுத்துவது தொடா்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நேரடியாக ஆய்வு செய்தாா்.
அம்மூா் பகுதியில் ஒரு பக்கம் பட்டா இடத்தில் வீடுகள் கட்டி அவா்கள் வெளியில் செல்வதற்கான சாலை வசதி ஏற்படுத்த முடியாமல் இருந்து வருவதையும், மேல்விஷாரம் ஹன்சா நகா் பகுதியில் சாலை வசதி, கலைநீா் கால்வாய் வசதி இல்லாமல் அடிப்படை சுகாதாரமின்றி இருப்பதையும் ஆய்வு செய்து உடனடி தீா்வு காண வனத்துறை அலுவலா்களை கேட்டுக் கொண்டாா்.
பல்வேறு மலைப்பகுதிகளில் பொதுமக்களுக்கென அடிப்படை வசதியை பூா்த்தி செய்திட அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பது போன்று, இப்பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். உடனடியாக பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை வசதி ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், அரசிடம் இருந்து அதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் தெரிவித்து ஆணையை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
மேல்விஷாரம் நகராட்சி பகுதியில் புதிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவிட்டாலும் தன்னுடைய சொந்த செலவிலேயே சாலை வசதி ஏற்படுத்தி தருகிறேன் என உறுதி அளித்தாா். அம்மூா் பேரூராட்சி பகுதியில் மண் சாலையை தாா் சாலையாக அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.
ஆய்வின் போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, வருவாய் கோட்டாட்சியா் இராஜராஜன், வனச்சரகா் சரவண பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.