பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்
அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!
அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மீது அமலாக்கத் துறை ஆதரமற்ற வழக்குகளைப் பதிவு செய்வதாக, நீணடகாலமாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலேவுக்கு, அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுத் தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமலாக்கத் துறையினால் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எம்பி சாகேத் கோகலே, பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுபற்றி அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்ற வழக்குகளின் எண்ணிக்கைகள் குறித்து மோடி அரசிடம், நாடாளுமன்றத்தில் நேற்று நான் கேள்வி எழுப்பினேன்.
அதுகுறித்து வெளியான அதிர்ச்சியான தகவல்கள் இதோ:
கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை 5829 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால், அதில் வெறும் 1398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. அப்படியானால், 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் 77 சதவிகித வழக்குகள் உரிய ஆதாரங்கள் இல்லாததினால் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு செல்லப்படவில்லை.
பதிவு செய்யப்பட்ட 5892 வழக்குகளில், வெறும் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில், வெறும் 0.13 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம்சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் என உறுதியாகியுள்ளது.
எதிர்க்கட்சியினரை குறிவைக்க, மோடி அரசு அமலாக்கத் துறையை ஏவல் படையாகப் பயன்படுத்தி வருகின்றது. அமலாக்கத் துறையின் வழக்குகளைப் பொறுத்தவரை அவர்களது நடவடிக்கைகள்தான் தண்டனையே. அப்படியென்றால், நிரபராதிக்கும் பிணைக் கிடைக்க பல மாதங்கள் ஆகும்.
அமலாக்கத் துறை பதிவு செய்த 5892 வழக்குகளில், 77 சதவிகித வழக்குகளுக்கு ஆதாரங்களே கிடையாது. மேலும், நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்ற மீதமுள்ள வழக்குகளில் வெறும் 8 வழக்குகளில் (0.13 சதவிகிதம்) மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்த அமலாக்கத் துறை, 10 ஆண்டுகளில் வெறும் 0.13 சதவிகிதம் மட்டுமே வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.
அமலாக்கத் துறை என்பது மோடி மற்றும் அமித் ஷாவின், கிரிமினல் சிண்டிகேட் தவிர வேறில்லை. பாஜகவுக்காக மிரட்டி பணம் பறிப்பது, மோசடி மற்றும் சலவை இயந்திரங்களை இயக்குவது மட்டுமே அமலாக்கத் துறையின் ஒரே பணி” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!