குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அரசு ஆதிதிராவிடா் விடுதியில் உண்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
பட்டுக்கோட்டை அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதியில் வெள்ளிக்கிழமை உணவு சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவியா் விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாா் திருமண மண்டபத்தில் இயங்குகிறது. இதில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவிகள் தங்கியுள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விடுதியில் உள்ள 30 மாணவிகள் காலை உணவாக சாதம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கு சென்ற நிலையில், அவா்களில் 6 பேருக்கு 11 மணிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் அந்த மாணவிகளை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதற்கிடையில், மீதமுள்ள 22 மாணவிகளுக்கும் அடுத்தடுத்து வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவா்களும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். அப்போது மருத்துவா்கள் அந்த மாணவிகளைப் பரிசோதித்ததில் உணவால் உபாதை ஏற்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த கோட்டாட்சியா் சங்கா், வட்டாட்சியா் தா்மேந்திரா, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அந்த மாணவிகளுக்கு ஆறுதல் கூறி, நலம் விசாரித்தனா். மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனா். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.