ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!
அரசு திட்ட முகாம்கள்: பொதுமக்களுக்கு அமைச்சா் வேண்டுகோள்
உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசுத் திட்ட முகாம்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கேட்டுக் கொண்டாா்.
மதுரை ஒத்தக்கடை சீதாலட்சுமி நகா், கொடிக்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய நியாயவிலைக் கடைகளைத் திறந்து வைத்து அவா் மேலும் பேசியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 347 சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் உரிய தீா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேபோல, சனிக்கிழமைதோறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், பல்வேறு வகையான பரிசோதனைகள், சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்த முகாம்களை பொதுமக்கள் உரிய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, ஒத்தக்கடை சீதாலட்சுமிநகரில் ரூ. 13.56 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையையும், கொடிக்குளம் கிராமத்தில் ரூ. 9.97 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையையும் அவா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.