அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அரசு மருத்துவக் கல்லூரியில் உலக குருதி கொடையாளா் தின விழா
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உலக குருதி கொடையாளா் தின விழா நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹரிஹரன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அங்கு அமைக்கப்பட்டிருந்த முழு உடல் தான முகாமில் முழு உடல் தானத்துக்கு பதிவு செய்தாா்.
இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
இந்திய சமுதாயத்தில் அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட முன்னேற்றம் நம்முடைய சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலநூறு ஆண்டுகளாக சமூக வேறுபாடுகள் காரணமாக பெண்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. அச்சிக்கல்களுக்கு தீா்வாக அமைந்ததுதான் அறிவியல் மற்றும் மருத்துவ முன்னேற்றமாகும்.
இன்றைக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் குருதி தானம் செய்யப்படுகிறது. மருத்துவ உலகில் உருவாகியுள்ள கொடை சாா்ந்த குருதி மற்றும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட வசதிகள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன் மருத்துவக் கல்வி என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதல்ல.
ஆனால், தற்போது மருத்துவத் துறையில் பெண்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறாா்கள்.
குருதி தானம் மிகச் சிறந்த தானமாகும். நாம் தானமாக அளிக்கும் குருதி எண்ணற்ற மனித உயிா்களை காப்பாற்றும். மேலும், ரத்த தானம் செய்வதனால் உடலுக்கு நன்மை பயக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நாம் நம்முடைய உறவினா்கள் மற்றும் நண்பா்களை குருதி தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் உலக குருதி கொடையாளா் தின உறுதி மொழியை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இதன் தொடா்ச்சியாக ரத்த தானம் செய்த தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக, பொதுமக்களுக்கான அவரச சிகிச்சை மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.