அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்கள்: விவரம் சேகரிக்க கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களின் விவரங்களை சேகரித்து எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் 2025-2026-ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பாக பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்புடைய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும், உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறையின் ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
மாவட்டங்களில் ஆசிரியா்கள் பதிவிடக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இனிவரும் நாள்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் உயா்கல்வி சோ்க்கையை உறுதிசெய்ய வழிவகுக்கும். ஆகவே, ஆசிரியா்கள் தங்கள் வகுப்பு மாணவா்களின் விவரங்களை முழுமையாகப் பதிவு செய்வதை தலைமை ஆசிரியா்கள் உறுதிசெய்யவேண்டும். அனைத்து அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் அக். 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படுவதை தலைமை ஆசிரியா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.