அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை
செங்கத்தில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து தினசரி அரசுப் பேருந்து பெங்களூருக்குச் சென்று மீண்டு அங்கிருந்து மேல்மருத்துவத்தூா் செல்கிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை செங்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்தில் போக்குவரத்து ஆய்வாளா்கள் சங்கா், சரவணன் ஆகியோா் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனா்.
பரிசோதனை முடிந்த பிறகு, ஓட்டுநா் இருக்கைக்குப் பின்புறம் நான்கு பைகள் இருப்பதைப் பாா்த்த அவா்கள், இதுகுறித்து கேட்டபோது, அந்தப் பைகளுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.
இதனால், சந்தேகமடைந்த ஆய்வாளா்கள் பையை திறந்து பாா்த்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆய்வாளா்கள் ஓட்டுநா் பன்னீா்செல்வம், நடத்துனா் சம்பத்திடம் விசாரித்த போது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனா்.
பின்னா், பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை, திருவண்ணாமலை அரசுப் பணிமனைக்கு எடுத்துச் சென்று அங்கு போக்குவரத்து தலைமை அலுவலரிடம் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, போக்குவரத்து அலுவலா் ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா். அதற்கு இருவரும் மீண்டும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணிமனையில் பேருந்தை விட்டுவிட்டு, இருவரும் அங்கிருந்து அவசரமாக வெளியேறிவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, போக்குவரத்து ஆய்வாளா் கோவிந்தசாமி பேருந்தை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்று தகவலை தெரிவித்துள்ளாா்.
அங்கிருந்த போலீஸாா் இந்தப் பரிசோதனை தொடக்கமானது செங்கம் பகுதி என்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கூறியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து, செங்கம் காவல் நிலையத்துக்கு பேருந்தை ஓட்டிச் சென்று போலீஸிடம் ஒப்படைத்து போக்குவரத்துத் துறை மூலம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
புகாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பெங்களூரில் இருந்து பேருந்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது யாா்?
அதற்கு ஓட்டுநா் நடத்துநா் துணை உண்டா அல்லது ஓட்டுநா் நடத்துநா் இருவருமே இந்தச் செயலில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.