விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் தோ்த் திருவிழா
பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி பௌா்ணமி நாளில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான தேரோட்ட விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மூலவரான ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி நாள்தோறும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை அறநிலையத் துறை அதிகாரிகள், கட்டளைதாரா்கள், அறங்காவலா் குழு ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. 70 அடி உயரம் கொண்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பக்தா்கள் தரிசனம் செய்து தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றிலும் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கங்களை எழுப்பியவாறு பக்தா்கள் தேரை இழுத்துச் சென்றனா்.
விழாவில், கூத்தப்பாடி, மடம், கே.அக்ரஹாரம், அளேபுரம், கே.குள்ளாத்திரம்பட்டி, புதூா், மல்லாபுரம், பொச்சாரம்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதிகளில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். சுமாா் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.