ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கேஜரிவால் தெரிவித்துள்ளதாவது,
தில்லி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவினர் மற்றும் காவல் துறையினரால் எங்கள் (ஆம் ஆத்மி) கட்சித் தொண்டர்கள் மிரட்டப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று எங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர் சேத்தன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். 2023-ல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படையற்ற புகாருக்காக இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரின் நடவடிக்கையால் உடல் உபாதைகள் ஏற்பட்டு லேடி ஹார்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லி காவல் துறையினர் ஆம் ஆத்மி தொண்டர்களைக் குறிவைத்து செயல்படுகின்றனர். ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தடுப்பதற்கும் இதில் தேர்தல் பணிகளில் தன்னார்வர்கள் பங்கேற்பதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய இரவிலும், வாக்குப்பதிவு நாளன்றும் எங்கள் தொண்டர்களின் பணிகளைத் தடுக்கும் செயல்களில் காவல் துறையினர், பாஜவினர் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுகிறது. எங்கள் கட்சியின் தொண்டர்கள் மீதான தாக்குதல் நேரடியாக ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குச் சமம். தேர்தலில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!