ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், வெங்கடேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு, பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன், திருப்பூரில் தனியாக வீடு எடுத்துத் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் இலக்கியாவுக்குத் தெரியவர, அந்த பெண்ணைப் பற்றி தனது கணவரிடம் இலக்கியா கேட்கவும், இருவருக்குள்ளும் அது சம்பந்தமாகத் தகராறு வெடித்துள்ளது.
இதன் காரணமாக, தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு, திருச்சி மாவட்டம், சிறுகனூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு இலக்கியா சென்று தங்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார் இலக்கியா. இந்தச் சூழலில், சம்பவத்தன்று கடைக்குப் போய்விட்டு வருவதாகக் கூறி சென்ற இலக்கியா, கடைசிவரை வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.
இதனால், பதறிப்போன அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் மகளைத் தேடியுள்ளனர். இறுதியில், தங்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒரு வாய்க்காலில் இலக்கியாவின் பிணம் கிடப்பதைக் கண்டு, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடம்பெல்லாம் காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து, இந்த தகவலறிந்து வந்த சிறுகனூர் காவல் நிலைய போலீஸார், இலக்கியாவின் இறந்த உடலைக் கைப்பற்றி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இலக்கியாவின் உடம்பில் அளவுக்கு அதிகமான ரத்த காயங்கள் இருந்ததால், அவரது கணவர் வெங்கடேஷிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், மொத்த உண்மையையும் வெங்கடேஷ் வாக்குமூலமாகக் கூறியுள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், "எனக்கு இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், இலக்கியா என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனாலும், என்னிடம் செல்போனில் இதைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். பொங்கல் பண்டிகைக்கு, மாமியார் வீட்டுக்குச் சென்ற நான், இலக்கியாவைச் சமாதானம் செய்தேன். ‘நாம் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம்’ என்று கூறி அழைத்தேன். ஆனால், இலக்கியா வரவில்லை. அவளது பெற்றோரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால்தான், இலக்கியாவைக் கொலை செய்ய முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று, செல்போனில் இலக்கியாவிடம் பேசியபோது, 'உன் அம்மா வீட்டிற்கு நான் வர மாட்டேன், தனியாக வா, பேசணும்' எனச் சொல்லி அழைத்தேன். சிறுகனூர் அருகே உள்ள வாய்க்காலில் உட்கார்ந்து இலக்கியாவுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, என்னிடம் பேசிவிட்டு, அவளது தாய் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள். அவள் நடந்து செல்லும்போதே, பின்னாடியே நான் சென்று, துணியால் இலக்கியாவின் கழுத்தை நெறித்துக் கொன்றேன். அதன்பிறகு, அங்கிருந்த கால்வாயில் அவளது இறந்த உடலை வீசிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் வெங்கடேஷைக் கைது செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய பெண்ணுக்காகத் தனது மனைவியை இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம், திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb