கும்பகோணம்: கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி; குப்பை தொட்டியில் வீசியதால் அதிர்ச்சி...
கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணி பெண்களை போல் வயிறு பெரிதாக இருந்துள்ளது. இது குறித்து சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கேட்டதற்கு வயிற்றில் பிரச்னை இருப்பதாக சொல்லியுள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அந்த மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மாதவிடாய் காரணமாக வலிப்பதாக வகுப்பறையில் சொல்லி விட்டு டாய்லெட்டுக்கு சென்றுள்ளார்.
அரை மணி நேரம் கழித்து மீண்டு அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது மாணவி மிகவும் சோர்வாக இருந்துள்ளார். ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அந்த மாணவியிடம் ”உனக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறாய், வயிற்றில் இப்ப வீக்கம் இல்லையேனு” கேட்டுள்ளனர். அதற்கு மாணவி, பிரீயட்ஸ் வந்ததில் வயிறு சரியாகி விட்டது என்றுள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட, மற்ற மாணவிகள் பேராசிரியையிடம் சொல்லியுள்ளனர்.
உடனே, 108 ஆம்புலன்ஸ் வர வைத்து மாணவியை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். டாக்டர்கள், என்ன செய்கிறது என்றதற்கு முறையாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்ததில் குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. பீரியட்டால் ரத்தப்போக்கு ஏற்படவில்லை, குழந்தை பிறந்திருப்பதால் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூற கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை என்ன செய்தாய் என கேட்டுள்ளனர். அந்த மாணவி அழுது கொண்டே, எனக்கு பிறந்த குழந்தையை டாய்லெட் அருகே உள்ள குப்பை தொட்டியில் போட்டு விட்டேன் என்றிருக்கிறார். உடனே, கல்லூரிக்கு சென்று குப்பை தொட்டியில் பார்த்த போது சின்ன சின்ன காயங்களுடன் கிடந்த பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கும் தீவுர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், மாணவியும் அவரது உறவினரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்குமான காதல் நெருக்கமாக அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். மாதங்கள் கடந்த நிலையில் வயிறு பெரிதாகியுள்ளது. அதையும் பல காரணங்களை சொல்லி சமாளித்துள்ளார். இது தன் வீட்டுக்கும், வெளியேவும் தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்ற பயத்தில் மறைத்துள்ளார். தன் நெருங்கிய தோழிகளிடத்தில் கூட சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கல்லூரியில் இருந்த போது, பிரசவ வலி ஏற்படவும் டாய்லெட்டுக்கு சென்று அங்கேயே குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார். பிரசவ வலியை எப்படி தாங்கினார் என்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக உள்ளது. நல்ல வேளையாக குழந்தைக்கும் எதுவும் ஆகவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனையும், விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.