'சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமணம்; நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபத...
சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், தங்களை பின்தொடர்ந்து துரத்திய கார்களை செல்போனில் வீடியோவாக எடுத்தனர். பின்னர் அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து சி.சி.டி.வி, வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரித்தனர்.
விசாரணையில், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர்தான் தி.மு.க கொடி கட்டிய காரில் தன்னுடைய நண்பர்களுடன் பெண்கள் பயணித்த காரை துரத்தியது தெரியவந்தது. இதையடுத்து சந்துரு, அவரின் நண்பர் சந்தோஷ் உள்பட கல்லூரி மாணவர்கள் என 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பள்ளிக்காரணை துணை கமிஷனர் கார்த்திக்கேயன், இந்த வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு உடனடியாக சி.எஸ்.ஆர், புலன்விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்திருக்கிறது.
காரில் பயணித்த பெண்கள், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தவுடன் சம்பவ இடத்துக்கு ரோந்து போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர் என்று விரிவாக விளக்கமளித்தார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களை போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``கைதான சந்துரு மீது ஆள்கடத்தல், மோசடி என குற்ற வழக்கு நிலுவையில் உள்ளன. இவர் நிரந்தரமாக எந்த வேலையும் செய்யாமல் இருந்து வருகிறார். இந்தக் குற்றச் சம்பவத்துக்கு சந்துரு பயன்படுத்திய கார், அவரின் பெயரில்லை. இவர், இன்னொருவரிடமிருந்த இந்தக் காரை வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார். மேலும் சந்துருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கும் பழக்கம் உள்ளது. அவர்கள் அனைவரும் இரண்டு கார்களில் சம்பவத்தன்று ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அதே இடத்துக்கு பெண்களும் காரில் வந்திருக்கிறார்கள்.
நள்ளிரவு நேரம் என்பதால் பெண்களுக்கும் சந்துருவுடன் வந்த கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் பயணித்த காரை சந்துருவுடன் வந்தவர்கள் இரண்டு கார்களில் பின்தொடர்ந்து விரட்டி வந்திருக்கிறார்கள். பெண்கள், தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தபிறகும் அங்கேயேயும் சந்துருவுடன் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்பிறகே பெண்கள், எங்களிடம் புகாரளித்தனர். இந்த வழக்கில் சந்துரு பயன்படுத்திய காரில் தி.மு.க கொடி இருந்தது. ஆனால் சந்துருக்கும் தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. டோல்கேட்டில் கட்டணம் கொடுக்காமல் தப்பிக்க சந்துரு, காரில் தி.மு.க கொடி கட்டியிருந்திருக்கிறார்.
சந்துருவின் நண்பன் சந்தோஷ். இவர், கல்லூரி ஒன்றில் படித்து முடித்துவிட்டு வேலைத் தேடி வருகிறார். இவர் மூலமாக கல்லூரியில் படிக்கும் சிலர் சந்துருவுக்கு நண்பர்களாகியிருக்கிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் குடும்பத்தினர் அ.தி.மு.கவில் இருக்கிறார்கள். சந்துருவின் உறவினர் ஒருவர் தாம்பரம் அ.தி.மு.கவில் இருக்கிறார். இன்னொருவின் சித்தப்பா நீலகிரி மாவட்ட அ.தி.மு.கவில் உள்ளார். இந்த வழக்கில் தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களின் காரை துரத்தியதால் எதிர்கட்சிகள் பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை என விமர்சித்தன. அதனால் இந்த வழக்கை மிகவும் கவனமாகவும் துரிதமாகவும் விசாரித்தோம். புலனாய்வு குறித்த தகவல்களையும் துணை கமிஷனரே நேரில் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கமளித்தார். வழக்கில் தொடர்புடைய கார்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"என்றனர்.