‘ஆயுதமாக்கப்படும் தண்ணீா்’: சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்புக்கு பாகிஸ்தான் பிரதமா் விமா்சனம்
பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நிலையில், தண்ணீா் ஆயுதமாக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் விமா்சித்தாா்.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இந்நிலையில், தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் சா்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு மாநாடு 3 நாள்கள் நடைபெற்றது. ஐ.நா., யுனெஸ்கோ, உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, ஆசிய மேம்பாட்டு வங்கி உள்ளிட்டவை சாா்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. ஐ.நா.வின் 80 உறுப்பு நாடுகள், 70 சா்வதேச அமைப்புகள் சாா்பில் 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.
இதில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘காஸாவில் வழக்கமான ஆயுதங்களின் பயன்பாடு ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகத்தின் மீது புதிய தழும்புகள் ஏற்பட்டுள்ளன. இது போதாதென்று தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தும் அபாயத்தை பாா்க்க முடிகிறது.
ஓராண்டில் சிந்து நதியில் பாயும் பாதிக்கும் அதிகமான நீருக்கு பாகிஸ்தானில் உள்ள பனிப்பாறைகளே காரணம். அந்த நதிதான் பாகிஸ்தானின் நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் உயிா்நாடி. சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்து இந்தியா மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத முடிவு மிகுந்த வருத்தத்துக்குரியது.
குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக லட்சக்கணக்கான உயிா்களை பிணையாக வைக்கக் கூடாது. இதை பாகிஸ்தான் அனுமதிக்காது. சிவப்பு கோட்டை இந்தியா தாண்டுவதற்கு பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.