"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதெ...
ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் வலது சாரி தலைவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவின் தீவிர வலது சாரி தலைவரான ஹெர்பெர்ட் கிக்ல், அந்நாட்டின் பழமைவாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்க அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டதாக இன்று (பிப்.12) கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜன.6 அன்று கிக்லின் ஆஸ்திரிய சுதந்திர கட்சி மற்ற கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைக்க முயற்சி மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் அரசாணை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் பழமைவாத கட்சியான ஆஸ்திரியன் பீபள்ஸ் பார்டியுடன் கொள்கை வேறுபாடுகள் மற்றும் அமைச்சரவை இலாக்காக்கள் பிரிப்பது குறித்து அவர் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இதையும் படிக்க: வங்கதேச வன்முறை சம்பவங்களில் 1,400 பேர் உயிரிழப்பு!
இந்நிலையில், இன்று (பிப்.12) அதிபர் அலக்ஸாண்டர் வேன் டெர் பெல்லனிடம் தான் அரசமைக்கும் முயற்சியிலிருந்து விலகிக்கொள்வதாக ஹெர்பெர்ட் கிக்ல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை எதிர்க்கும் கிக்கலின் கட்சி தனது குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் போன்றவற்றின் மூலம் கடந்த 2024 செப்டம்பரில் நடைபெற்ற ஆஸ்திரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் அது 28.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தது.
அதன் மூலம், அப்போதைய அதிபர் கார்ல் நெஹாமரின் மக்கள் கட்சியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.