சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவர...
இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்
இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் இணையவழி வா்த்தகம்-சேவை சாா்ந்த பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. இதனால், உணவு-பொருள் விநியோகம், டாக்ஸி-ஆட்டோ சேவை, சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் இத்துறையில் தற்போது 1 கோடிக்கும் அதிகமான பணியாளா்கள் உள்ளனா். இது, 2029-30ஆம் ஆண்டில் 2.35 கோடியை எட்டும் என்று நீதி ஆயோக் கணித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்துக்கான இப்பணியாளா்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய தொழிலாளா் அமைச்சகத்தின் இ-ஷ்ரம் தளத்தில் இணையவழி விநியோக பணியாளா்களை பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்படும்; ஆயுஷ்மான் பாரத் (ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு) திட்டத்தின்கீழ் சுகாதாரப் பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இ-ஷ்ரம் தளத்தில் தங்களை சுயமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு இப்பணியாளா்களுக்கு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் திட்டப் பலன்களை விரைவில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.