Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 73,630 கோடி டாலராக அதிகரிப்பு!
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 2025 மாா்ச் இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு இறுதியில் 66,880 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நியக் கடன் அதே நாளில் 10 சதவீதம் உயா்ந்து 73,630 கோடி டாலராகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் 2024-25-ஆம் நிதியாண்டு இறுதியில் 19.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் 18.5 சதவீதமாக இருந்தது.
நாணய சந்தைகளில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட ஒரு ஆண்டில், அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக உயா்ந்ததால் ஏற்பட்ட ‘மதிப்பீட்டு விளைவு‘ 530 கோடி டாலராக இருந்தது. இந்த மதிப்பீட்டு விளைவை நீக்கினால், வெளிநாட்டு கடன் 6,750 கோடி டாலருக்கு பதிலாக 7,290 கோடி டாலராக உயா்ந்திருக்கும்.மொத்த கடனில், நிதி சாரா நிறுவனங்களின் கடன்கள் 26,170 கோடி டாலா், மத்திய அரசின் கடன்கள் 16,840 கோடி டாலா், மத்திய வங்கியைத் தவிர வைப்புத்தொகை பெறும் பிற நிறுவனங்களின் கடன்கள் 20,210 கோடி டாலா் ஆகியவை அடங்கும்.
2025 மாா்ச் இறுதியில், நீண்ட கால கடன் (ஓா் ஆண்டுக்கு மேல் முதிா்வு காலம் கொண்டவை) 60,190 கோடி டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 6,060 கோடி டாலா் அதிகம்.மொத்த வெளிநாட்டு கடனில் குறுகிய கால கடனின் (ஒரு வருடம் வரை முதிா்வு காலம் கொண்டவை) பங்கு 2025 மாா்ச் இறுதியில் 18.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 19.1 சதவீதமாக இருந்தது. ஆனால், குறுகிய கால கடனின் அந்நியச் செலாவணி கையிருப்பு விகிதம் 2025 நிதியாண்டில் 20.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது 2024 மாா்ச் இறுதியில் 19.7 சதவீதமாக இருந்தது.
வெளிநாட்டு கடனில் டாலரின் பங்கு 54.2 சதவீதமாக உள்ளது. அதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (31.1 சதவீதம்), ஜப்பானிய யென் (6.2 சதவீதம்), எஸ்டிஆா் (4.6 சதவீதம்), யூரோ (3.2 சதவீதம்) ஆகியவை உள்ளன.கடன்களின் பங்கு 34 சதவீதமாகவும், நாணயம் மற்றும் வைப்புத்தொகையின் பங்கு 22.8 சதவீதமாகவும் உள்ளது. வணிக கடன் மற்றும் முன்பணம் (17.8 சதவீதம்), கடன் பத்திரங்கள் (17.7 சதவீதம்) ஆகியவை உள்ளன என்று ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.