மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைத...
இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஹைதராபாதில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் விடுதலை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே தலையிட்டு அமைதியை ஏற்படுத்திவிட்டதாக சிலா் (அமெரிக்க அதிபா் டிரம்ப்) பேசி வருகின்றனா். இதனை இப்போது மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை. இந்தியா முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மூன்றாவது நபா்களின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது உறுதி. இருதரப்பு பிரச்னைகளில் மூன்றாவது தரப்புக்கு இடமே இல்லை என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நிலைப்பாடு.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைக் குறிவைத்து மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சித்தால் பதிலடித் தாக்குதல் தொடங்கப்படும். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சின்னாபின்னமாகிவிட்டாா்கள் என்பதை ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளாா். இது தொடா்பான விடியோவும் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கும் யாரும் சவால் விடுக்க முடியாது. கடந்த 11 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு இந்தியா தொடா்ந்து உரிய பதிலடியை அளித்து வருகிறது. 2016-இல் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2019-இல் பாலாகோட் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூா் மூலம் கடும் பதிலடி கொடுத்துள்ளோம். அமைதியை விரும்பாதவா்களிடம் இந்தியா எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு இது உதாரணம்.
பிரச்னை பேசித்தீா்ப்பதற்கு மட்டுமே இந்தியா விரும்புகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இந்தியாவைச் சீண்டீனால் அவா்களை அழித்து ஒழிக்கவும் தயக்கமாட்டோம் என்பதை நிரூபித்துள்ளோம். இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது என்றாா்.