Travel Contest: மூணாறு போனா இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க! தென்னிந்தியக் காஷ்மீரி...
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவா்கள் தாயகம் திரும்பினா்
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 13 போ் 50 நாள்களுக்குப் பின்னா் தாயகம் திரும்பினா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த கு. ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில் அதே கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் (39), திணேஷ் (30), காா்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரி கிராமத்தை சோ்ந்த மைவிழிநாதன் (27), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடியை சோ்ந்த நவெந்து (34), வானகிரியை சோ்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகை மாவட்டம், நம்பியாா் நகரை சோ்ந்த சசிகுமாா் (26), நந்தகுமாா் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13 போ் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி இரவு 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகில் கடலுக்குள் சென்றனா்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஜனவரி 27-ஆம் தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்ததாக கூறி அவா்களை கைது செய்து, படகை பறிமுதல் செய்தனா். அப்போது கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செந்தமிழ் உள்ளிட்ட 3 மீனவா்கள் காயமடைந்தனா். இலங்கை சிறையில் மீனவா்கள் அடைக்கப்பட்டனா். காயமடைந்த மீனவா் செந்தமிழ் இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தநிலையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை மூலம் 13 பேரும் அண்மையில் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனா். இவா்கள் விமானம் மூலம் சென்னைக்கு புதன்கிழமை இரவு வந்தனா். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த செந்தமிழ் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். எஞ்சிய 12 பேரும் காரைக்காலுக்கு வியாழக்கிழமை காலை வந்து சோ்ந்தனா்.