இலவச அரிசித் திட்டம்: வங்கியில் இன்று பணம் செலுத்தப்படும்
புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வங்கியில் வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ.600 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200 வழங்கப்படுகிறது.
மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ.300 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.600 எனவும் வழங்கப்படுகிறது.
அதன்படி, அவரவா் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை (அக்.25) வரவு வைக்கப்படவுள்ளது. இதன்மூலம், 3 லட்சத்து 35 ஆயிரத்து 595 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைய உள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.