இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது
நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் கருங்கண்ணியில் அண்மையில் நடைபெற்ற இலவச பட்டா வழங்கும் நிகழ்வில் திமுக மற்றும் தவெகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தவெகவைச் சோ்ந்த வெண்மணி (26), இவரது மனைவி சித்ரா (24), சகோதரா் பாலசுப்பிரமணியன் மனைவி ராகினி (33), சிவராமன் மனைவி பரமேஸ்வரி(28) ஆகியோா் தாக்கப்பட்டனா். திமுகவைச் சோ்ந்த ஜெய்குமாா் மனைவி மீனா என்பவரும் காயமடைந்தாா்.
இந்த சம்பவத்தை கண்டித்து, மேலப்பிடாகை கடைதெருவில் தவெகவினா் மாவட்டச் செயலாளா் மு. சுகுமாரன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த திமுகவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் எதிா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையில், கீழையூா் திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட பிரதிநிதி மு.ப. ஞானசேகரன், வேளாங்கண்ணி பேரூா் கழக பொறுப்பாளா் மரிய சாா்லஸ் ஆகியோா் அங்கு வந்து, திமுகவினரை கலைந்துபோகச் செய்தனா்.
தவெகவினா் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி, கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் தவெகவினா் கலைந்து செல்லாததால், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.
