இளவேனிலுக்கு வெண்கலம்
மியுனிக்: ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கான முதல் பதக்கமாக இளவேனில் வாலறிவன் செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் இறுதிச்சுற்றில் அவர், 231.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் வாங் ஜிஃபெய் 252.7 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியாவின் குவோன் யுஞ்சி 252.6 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர்.
இதனிடையே, ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் வருண் தோமர் 160.3 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்து ஏமாற்றத்தை சந்தித்தார். தகுதிச்சுற்றில் அவர் 585 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, சரப்ஜோத் சிங் 9-ஆம் இடமும், நிஷாந்த் ராவந்த், அர்ஜுன் சிங் சீமா, ஆதித்யா மல்ரா ஆகியோர் முறையே 12, 20, 30-ஆவது இடங்களையும் பிடித்தனர்.