இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மணக்கரம்பை டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டது.
மாமா அழைத்ததன் பேரில் விஜய் மணக்கரம்பை முதன்மைச் சாலை பகுதிக்குச் சென்றாா். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜய் கத்தியால் குத்தப்பட்டாா். இதனால் பலத்த காயமடைந்த விஜய் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.