மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாகபூஜைகள் தொடக்கம்
தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாக பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கியது.
இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்காக அம்பாளின் வலது புறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துா்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துா்க்கை, அம்பாள் உற்சவ மூா்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
மூலவராக புற்று வடிவில் அருள்பாலிக்கும் அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) தைலாபிஷேகம் நடைபெறும். அப்போது, ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அா்ச்சனை, ஆராதனை செய்யப்படும்.
இதன்படி, இக்கோயிலில் தைலாபிஷேகம் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கியது. இதில், கருவறையிலுள்ள அம்பாளுக்கு 48 நாள்களுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் தைலாபிஷேகம் புதன்கிழமை (ஜூன் 4) நிறைவடையவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலில் முதல் கால யாக பூஜை திங்கள்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக பூஜைகள், புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள், நிறைவு ஆகியவை நடைபெறவுள்ளன.