இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்
இளைஞா் நீதிக்குழும சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி, கடலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக்குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூகப்பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசு பணி அல்ல.
விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். (அல்லது) குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல், சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும், 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை நிறைவு செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை கடலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சாா்ந்த இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தகுதிவாய்ந்த நபா்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.