இஸ்ரேல் – ஹமாஸ் போர் - இன்று 500-வது நாள்! 48,200 பாலஸ்தீனர்கள் பலி; பாதிப்பேர் பெண்கள், குழந்தைகள்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்று (பிப். 17) 500-வது நாள்!
2023 அக்டோபர் 7 ஆம் தேதிதான் தெற்கு இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஒரு மாதமாக காஸா பகுதியில் தாற்காலிகமாகப் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் முடியவுள்ள இந்தப் போர்நிறுத்தம் நீடிக்குமா? பேச்சு தொடங்குமா? மீண்டும் மோதல் தொடருமா? இரு தரப்பினரும் என்ன செய்யப் போகின்றனர் என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.
இந்த 500 நாள் பேரழிவுப் போரில் இழந்தவை என்னென்ன? எத்தனை உயிர்கள்?
இஸ்ரேல் அரசு, காஸா நல்வாழ்வுத் துறை அமைச்சகம், ஐ.நா. அமைப்பு நிறுவனங்கள் உதவியுடன் திரட்டப்பட்ட தகவல்கள்:
2023 அக். 7-ல் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்கள் – சுமார் 1,200.
காஸாவுக்குப் பிணைக் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டோர் – 251
இன்னமும் விடுவிக்கப்படாமல் காஸாவிலுள்ள பிணைக்கைதிகள் – 73.
காஸாவில் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் பிணைக்கைதிகள் – 36
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் – 48,200 (இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்).
காஸாவில் காயமுற்ற பாலஸ்தீனர்கள் – 1,11,600
கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் – 846
காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் – 10,000 பிளஸ்
காஸா மக்கள்தொகையில் வெளியேறியோர் – 90 சதவிகிதம்
போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து வடக்கு காஸாவுக்குள் சென்றோர் – 5,86,000
ஹமாஸ், ஹெஸ்புல்லா தாக்குதல்களால் இடம் பெயர்ந்தோர் – 75,500
காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற வீடுகள் – 2,45,000 பிளஸ்
காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற சாலைகள் – 92 சதவிகிதம்
காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற மருத்துவமனைகள் – 84 சதவிகிதத்துக்கும் அதிகம்.