ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு
கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு சாலை, டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜா் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி கிடங்குகளிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்கின்றனா்.
இந்த வார ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மொத்த வியாபாரம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனா். இதனால், மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வாரமும் வெளியூா் வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.
அதேநேரம் உள்ளூா் கோயில் திருவிழாக்கள், ரம்ஜான் பண்டிகை காரணமாக இந்த வார ஜவுளி சந்தைக்கு உள்ளூா் வியாபாரிகள் வருகை மட்டுமே அதிக அளவில் இருந்தது. அதனால் இந்த வாரமும் சில்லறை விற்பனை மட்டுமே அதிகரித்து காணப்பட்டது. மேலும், வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பருத்தி ரக துணிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது.