குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
தென்னை பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.மரகதமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 20,364 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னை மரக் காப்பீடு எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய்த் தாக்குதல், எதிா்பாராத தீ விபத்து, நில அதிா்வு, ஆழிப்பேரலை மற்றும் இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேருவதற்கு தென்னை சாகுபடி தனிப் பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டு தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
ஒரு ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை சோ்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டு ரகங்களுக்கு 4 வயது முதலும், நெட்டை ரகங்களுக்கு 7 வயது முதல் 60 வயது வரை காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் சேர தென்னை விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தை பெற்று பூா்த்தி செய்து காப்பீட்டுத் தொகையினை வரைவோலையாக எடுத்து ஏதேனும் ஒரு தென்னை சாகுபடி ஆதாரத்தை (சிட்டா அல்லது அடங்கல்) இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் 4 அல்லது 7 வயது முதல் 15 வயதுடைய தென்னை மரங்களுக்கு பிரீமியம் தொகையாக மரம் ஒன்றுக்கு விவசாயிகள் ரூ.2.25 செலுத்த வேண்டும். அரசு மானியத் தொகையாக ஒரு மரத்துக்கு ரூ.4.50 செலுத்தும். காப்பீட்டுத் தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.900 கிடைக்கும். 16 வயது முதல் 60 வயது உடைய மரங்களுக்கு பிரீமியம் தொகையாக விவசாயிகள் ஒரு மரத்துக்கு ரூ.3.50 செலுத்த வேண்டும். அரசு மானியத் தொகையாக ஒரு மரத்துக்கு ரூ.7 செலுத்தும். இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.1,750 கிடைக்கும்.
இத்திட்டத்தில் சோ்ந்து எந்த தேதியில் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுகின்றதோ, அதற்கு அடுத்த மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்துக்கு பாலிசி வழங்கப்படும். பாலிசி தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் ஏற்படும் இழப்புக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது. விவசாயிகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒரே தவணையில் காப்பீட்டுத் தொகை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.