அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?
"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்து வருகிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னை குறித்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி பிரச்னையை முடித்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து சந்தோஷினால் பிரச்னை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தீக்காயங்களுடன் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ”சந்தோஷ், அவரது நண்பர் முத்தையாவுடன் வீட்டிற்கு வந்து வழக்கம்போல் தன்னிடம் பேச வேண்டும் என மிரட்டி தொந்தரவு கொடுத்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்” என தெரிவித்ததாக போலீஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அச்சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பேரூரணியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.