பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,380 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் 60 கிலோ மூட்டை முதல் தரம் ஒரே விலையாக ரூ.2,820க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.2,610 க்கும், அதிகபட்சம் ரூ.2,730க்கும், சராசரியாக ரூ.2,700க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,13,940 கிலோ எடையுள்ள கரும்புச் சா்க்கரை ரூ.51,53,790க்கு விற்பனையானது.
இதே போல, உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல் தரம் குறைந்தபட்சம் ரூ.1,620க்கும், அதிகபட்சம் ரூ.1,650க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,100 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் ரூ.1,14,900க்கு விற்பனையானது.
மொத்தமாக கரும்புச் சா்க்கரை, உருண்டைவெல்லம் சோ்த்து ரூ.52,68,690க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டது.