பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்
பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கின்ற ஞான நூல்கள். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் 'திருஉத்திரகோச மங்கை' என்று அழைக்கப்படுகிறது.
இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். இறைவி மங்களாம்பிகை, திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தியபடி காட்சி அருள்கிறாள்.
மண் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மங்கை உத்திரகோசமங்கை என்பர் பெரியோர். ராவணனின் மனைவியான இத்தல இறைவனை வணங்கியதாகச் சொல்கிறது தலபுராணம். சிவபக்தனான ராவணன் - மண்டோதரி திருமணம் இங்குதான் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள்.

ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றான வலைவீசி மீன் பிடித்த விளையாடல் நடைபெற்ற தலம் இது. மீனவப் பெண்ணாகத் தோன்றிய அம்பிகையை சுவாமி கரம் பிடித்த தலமும் இதுதான்.
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறப்பெடுக்கக் காரணமான தலமும் இதுவே. நவகிரகங்கள் ஆலய வழிபாட்டில் இல்லாத காலத்தில் தோன்றிய கோயில் இது என்பதால் இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கோள்கள் மட்டுமே உள்ளன. இதுவே இந்த ஆலயத்தின் பழைமைக்கு மற்றுமொரு சான்று.
நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. ஈசனிடம் வேத ரகசியம் கேட்க வந்த 1,000 முனிவர்களில் 999 பேர் ஈசனிடம் ஐக்கியமாகிவிட, எஞ்சி நின்ற ஒரு முனிவரே மாணிக்கவாசகராக மறுபிறப்பு எடுத்தார் என்கின்றன புராணங்கள். எனவே திருவாசகம் என்னும் வேதம் நமக்குக் கிடைக்கக் காரணமான தலமும் இதுவே.
இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று மரகதலிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம். தினமும் மதிய வேளையில் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும் இதைக் கண்டாலே முக்தி நிச்சயம் என்பார்கள். இங்குள்ள தலவிருட்சமான இலந்தை 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று சொல்கிரார்கள் விஞ்ஞானிகள்.
தினமும் அதிகாலையில் அம்பாள் சுவாமியை பூஜிப்பதாக ஐதிகம்.அதேபோல், மாணிக்கவாசகர் இறவா நிலை பெற்று ஈசனுக்கு அருகே அமர்ந்து அவருக்கு அன்னம் பாலிப்பதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறைக்கு அடுத்து மாணிக்கவாசகருக்கு ஈசன் தரிசனம் தந்த இடமும் இதுவே.
ஒரே நாளில் மூன்று வேளை மங்களநாதரை தரிசித்தால் வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோன்று காசியிலும் தீராத பித்ரு சாபமும் இங்கு தீரும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.
பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவை ஏழு ஜன்ம பாவம் தீர்க்கும் சக்தி கொண்டவை என்கிறார்கள். அதேபோன்று கோயிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும் அதற்கு அருகே மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை உள்ளன.
இப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் வரும் ஏப்ரல் 4 -ம் தேதி காலை 9 முதல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டித் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி 16 ம் தேதி யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. 101 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. அதன்பின் 4 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி உத்திரகோசமங்கையில் எங்கு பார்த்தாலும் சிவாசார்யப் பெருமக்களாகக் காணப்படுகிறார்கள். இன்று யாகசாலைக்குரிய புனித நீரை சிவாசார்யர்கள் எடுத்துவந்து சேர்த்தனர். இப்படி கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சிவபக்தர்களின் மனம் மகிழச் செய்யும் செய்தியைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
யாகசாலை பூஜைகள் தொடங்கும் ஏப்ரல் 1 முதல் கும்பாபிஷேக நாள்வரை மரகத நடராஜரை சந்தனக் காப்பு இல்லாமல் தரிசிக்கலாம் என்பதுதான் அது.
மரகதநடராஜர் என்ன விசேஷம்?
இங்குள்ள நடராஜர் திருமேனி பச்சை மரகதத்தால் ஆனது. விலை மதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷமாகத் திகழும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த நடராஜர் திருமேனி உலக அதிசயம் என்றே சொல்லலாம். இந்தத் திருமேனியில் எப்போதும் சந்தனக் காப்பு பூசியிருப்பார்கள். மார்கழித் திருவாதிரைக்கு முதல் நாள் மட்டுமே சந்தனம் இல்லாமல் இந்த நடராஜரை தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது; அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என்கிறார்கள்.
'மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும்' என்பார்கள். அவ்வளவு நுட்பமானது மரகதக் கல். அதில் நுட்பமாக நடராஜர் திருமேனி அமைந்திருப்பதால் கோயிலில் இசைக்கும் வாத்திய ஓசையால் திருமேனிக்கு பாதிப்பு ஏற்படாதபடி இருக்க சந்தனக் காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சைத் திருமேனி தரிசனம் வாய்க்கும்.

கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஏப்ரல் 1 மாலை 5:00 மணிக்கு சந்தனம் களைதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாளும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். மரகத நடராஜரை தரிசித்தால் வினைகள் தீரும். நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏற்கெனவே ஜனவரி மாதம் திருவாதிரையில் மரகத நடராஜர் தரிசனம் கிடைத்த நிலையில் மீண்டும் மரகத நடராஜர் தரிசனம் கிடைக்க இருப்பதை எண்ணி சிவபக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் உத்திரகோசமங்கை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து மங்களநாதரின் அருளைப் பெறலாம். கூடவே மரகத நடராஜரையும் தரிசித்து சகல வரங்களையும் பெறலாம்.