உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொலை!
ஸ்பெயின் நாட்டில் உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சின், அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் அண்டிரி போர்ட்னோவ். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிலுள்ள அமெரிக்க பள்ளியின் அருகில் இன்று (மே 21) காலை 9.15 மணியளவில் அவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், அவர் பலியானதாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது தலையிலும் முதுகிலும் சுட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் அருகிலுள்ள காட்டுப் பகுதியினுள் சென்று தப்பியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, உக்ரைனின் முன்னாள் அரசியல்வாதியான அண்டிரி போர்ட்னோவ், முன்னாள் அதிபர் யனுகோவிச்சின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்டார். மேலும், கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதிபர் மாளிகையின் துணைத் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.
இத்துடன், அதிபர் யனுகோவிச்சின் அரசில் ரஷிய சார்பு அரசியல் நபராக அண்டிரி போர்ட்னோவ் கருதப்பட்டார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் புரட்சியாளர்களுக்கு எதிரான சட்டத்தை உருவாக்குவதில் அவர் ஈடுபட்டார். மேலும், அவர் மீது கொலை, கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள்! போப் வலியுறுத்தல்!