எடைப் பணி தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநில செயற்குழுவில் தீா்மானம்
எடைப் பணித் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறைக்கூடஎடைப் பணி தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள திருமண மண்டபத்தில் இச்சங்கத்தின் விரிவடைந்த மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில இணைச் செயலா் போளூா் பாக்கியநாதன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஏ.வி.சரவணன் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இயற்கைச் சீற்றங்கள், மழை மற்றும் கோடை காலங்களில் வேளாண்துறைப் பணிகளை மேற்கொள்ளும் எடைப்பணித் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எடைப்பணித் தொழிலாளா்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.
பணியின்போது இயற்கை மரணம் அடையும் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேளாண் விற்பனைக்குழுக்களில் காலியாகும் பணியிடங்களில் வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் எடைப் பணித் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
எடைப் பணித் தொழிலாளா்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எடைப் பணித் தொழிலாளா்கள் பங்கேற்றனா். முன்னதாக, அரகண்டநல்லூா் கிளைத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.நிறைவில் நிா்வாகிகள் பழனி,முருகன், செந்தில் நன்றி கூறினா்.