எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில் மிக முக்கிய பாடமாகக் கருதப்படும் இயற்பியல் பாடம் மாணவர்களுக்கு சற்று கடினமான பாடம் என்பதாலும், கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்படும் பாடம் என்பதாலும், இந்தத் தேர்வு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இயற்பியல் பாடத்தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் சற்று கடினமானதாக இருந்ததாகவும், சரியான விடையைத் தேர்வு செய்யும் பிரிவில் மிகவும் நுணுக்கமான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், கணித முறையில் அமைந்த வினாக்கள் மிக நீண்டதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், சில எதிர்பாராத கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும் ஒரு சில மாணவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த தேர்வில் அதிக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் நீளமான கேள்விகளால் நேர மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
அதாவது, ஒரு சில மாணவர்கள்தான் தேர்வை உரிய நேரத்துக்குள் முழுமையாக எழுதி முடித்ததாகவும், பல மாணவர்களால் உரிய நேரத்துக்குள் முடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
முழு மதிப்பெண் எடுக்க திட்டமிட்டிருந்த மாணவர்களும் இந்த முறை 95க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவதே கடினமாக இருக்கலாம் என்றும் சில ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.